Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகும் வாட்டர் பெல் திட்டம்.. இதன் அவசியமும் முக்கியத்துவமும் என்ன?

Water Bell System: மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளில் விரைவில் வாட்டர் பெல் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகும் வாட்டர் பெல் திட்டம்.. இதன் அவசியமும் முக்கியத்துவமும் என்ன?
அமைச்சர் அன்பில் மகேஷ்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Jun 2025 06:33 AM

தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளில் மாணவர்கள் சரியான நேரத்தில் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவில் இந்த திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதாகவும் அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் எனவும் இதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நமது அன்றாட உடல் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று தண்ணீர். நமது உடலில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் தான் உள்ளது இதனால் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

தண்ணீரின் அவசியம்:

குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் போதிய தண்ணீர் உட்கொள்ளவில்லை என்றால் உடல் ரீதியாக அவர்கள் சோர்வாகவும் பாடத்தில் கவனம் செலுத்த முடியாத ஒரு நிலையும் ஏற்படக்கூடும். உணவு எவ்வளவு முக்கியமானது அதே அளவு தண்ணீரும் ஒருவருக்கு மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு நாம் மூன்று வேலை உணவை எடுத்துக் கொள்கிறோம் என்றால், அதே போல் ஒவ்வொரு நபரும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ்:


ஜூன் 27 2025 அன்று, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், வாட்டர் பெல் திட்டம் தொடர்பாக பேசிய அவர், மாணவர்கள் போதிய தண்ணீர் குடிப்பதில்லை என்றும் இதன் காரணமாக காலை வணக்க கூட்டத்தில் அல்லது வகுப்பறைகளில் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது ஒரு சில மாணவர்கள் மயக்கம் அடையும் நிலையில் ஏற்படுகிறது.

பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்:

இதனை தவிர்த்து மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் இந்த வாட்டர் பெல் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கேரளாவில் இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தி வருவதாகவும், இது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகும் குறிப்பிட்டிருந்தார். மேலும், “ தமிழகத்தில் பள்ளிகளில் உடல்நிலை சார்ந்த விஷயங்கள் குறித்து ஆசிரியர்கள் தொடர்ந்து எடுத்துரைத்து வருகின்றனர்.

மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு தமிழக அரசு தரப்பில் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல தற்போது மாணவர்கள் போதிய குடிநீரை எடுத்துக் கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாட்டர் பெல் திட்டம் அமலுக்கு வரும். இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.