Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோடை காலத்தில் தப்புமா தமிழகம்..? அணைகளில் இருக்கும் 185 டி.எம்.சி..!

Tamil Nadu dams fill up: தமிழகத்தில் அணைகளில் 82.91% நீர் இருப்பு உள்ளது. குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. வருங்கால மழை மூலமாக மேலும் நீர் வளம் பெருகும் என நம்பிக்கை நிலவுகிறது. 14,141 பாசன ஏரிகளில் 422 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் மழை வருமானால் வறண்ட ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை காலத்தில் தப்புமா தமிழகம்..? அணைகளில் இருக்கும் 185 டி.எம்.சி..!
தமிழக அணைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Jul 2025 13:00 PM

தமிழகம் (Tamilnadu) முழுவதும் தற்போது பெய்து வரும் பரவலான மழையின் காரணமாக, மாநிலத்தின் நீர்தேக்கங்களுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் தற்போது 185.958 டி.எம்.சி. (Thousand Million Cubic Feet) தண்ணீர் கையிருப்பில் இருப்பதாக நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது மொத்த கொள்ளளவில் 82.91% ஆகும். இந்தச் சாதகமான நிலை, மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்கப்பட்டு வருவதை உறுதி செய்கிறது.

தமிழக அணைகளின் நீர் இருப்பு: ஒரு விரிவான பார்வை

தமிழகத்தில் நீர்வளத்துறை மொத்தம் 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களைப் பராமரித்து வருகிறது. இவற்றின் ஒட்டுமொத்தக் கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில், மேட்டூர், பவானிசாகர், பெரியாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி.யாகும். இந்த அணைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பாசன, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.

Also Read: எந்தெந்த மாவட்டங்கள்? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

அணைகளில் இருக்கும் 185 டி.எம்.சி..!

முக்கிய அணைகளின் இருப்பு: தற்போது, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 93.31 டி.எம்.சி, ஈரோடு பவானிசாகரில் 27 டி.எம்.சி, கோவை பரம்பிக்குளத்தில் 12.87 டி.எம்.சி, சேலையாறில் 4.98 டி.எம்.சி, சாத்தனூரில் 4.85 டி.எம்.சி, பெரியாறில் 4.69 டி.எம்.சி, வைகையில் 4.51 டி.எம்.சி எனப் பெருமளவு நீர் இருப்பு உள்ளது.

குடிநீர் விநியோகம்: அணைகளில் போதுமான அளவு நீர் கையிருப்பில் இருப்பதால், மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடிவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை மூலம் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீர், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காகத் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

பாசன ஏரிகளின் நிலை மற்றும் எதிர்வரும் பருவமழை எதிர்பார்ப்பு

அணைகள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 14,141 பாசன ஏரிகளில் 422 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும், 1,028 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் வரையும், 1,716 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையும் நிரம்பியுள்ளன. இருப்பினும், 2,254 ஏரிகள் இன்னும் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் கணிசமானவை வறண்டுள்ளன. அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

வரும் பருவமழைக் காலங்களில் மேலும் மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில், வறண்டு கிடக்கும் ஏரிகள் மற்றும் அணைகளும் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தமிழகத்தின் நீர் ஆதாரத்தைப் பெருக்கி, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு மேலும் வலு சேர்க்கும்.