கோடை விடுமுறைக்கு ரெடியா? போத்தனூரில் இருந்து சீறிப்பாயும் சிறப்பு ரயில்.. முழு தகவல் இதோ!
Summer Special Train: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து பீகார் மாநிலத்துக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் எப்போது இயக்கப்படும். எந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இந்த பதிவில் உள்ளன.
நாட்டில் தற்போது கோடை காலம் நெருங்கி வருகிறது. இதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தலைகாட்டத் தொடங்கி உள்ளது. அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவற்றுக்கு படை எடுப்பது வழக்கமாகும். இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம், பரோனி ரயில் நிலையத்துக்கு வருகிற ஏப்ரல் 20- ஆம் தேதி ( திங்கள்கிழமை) மற்றும் ஏப்ரல் 27- ஆம் தேதி ( திங்கள்கிழமை) சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயணிகளின் வசதிக்காக கோடை கால சிறப்பு ரயில்
நாட்டில் தற்போது கோடை கால விடுமுறை தொடங்க உள்ளது. இந்த காலங்களில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக ரயில்களில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து பரோனி ரயில் நிலையத்துக்கு கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: தகிக்கும் வெயில்.. தணிக்கும் புல் குடில்கள்.. மகாபலிபுரத்தில் அசத்தல் ஏற்பாடு!
ரயில் புறப்படும் நேரம் குறித்த தகவல்
அதன்படி, வருகிற ஏப்ரல் 20 மற்றும் 27- ஆம் தேதிகளில் அதிகாலை 4:30 மணிக்கு புறப்படும் இந்த கோடை கால சிறப்பு ரயிலானது ( வண்டி எண்-06021) 3- ஆவது நாள் காலை 10:30 மணிக்கு பிஹார் மாநிலம், பரோனி ரயில் நிலையத்தை சென்றடையும். இதே போல, மறு மார்க்கமாக பரோனி ரயில் நிலையத்தில் இருந்து வருகிற ஏப்ரல் 16, 23, 30 ஆகிய தேதிகளில் மதியம் 1:15 மணிக்கு புறப்படும் கோடை சிறப்பு ரயில் ( வண்டி எண்-06022) 3- ஆவது நாள் இரவு 11:30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.
கோடை கால சிறப்பு ரயில்களில் உள்ள வசதிகள்
இந்த ரயிலானது திருப்பூர், சேலம், ஈரோடு, காட்பாடி, ஜோலார்பேட்டை, கூடூர், பெரம்பூர், நெல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த கோடை கால சிறப்பு ரயிலில் 1 குளிர் சாதன வசதி உடைய 3 அடுக்கு பெட்டி, 16 படுக்கை வசதி உடைய பெட்டி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கான 2- ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோடை கால சிறப்பு ரயில் அறிவிப்பால் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: விலங்குகளின் ராஜ்ஜியம்.. பசுமையின் சங்கமம்.. தென்னிந்தியாவின் சிரபுஞ்சி.. என்ஜாய்மெண்டுக்கு கியாரண்டி!

