பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…சென்னையில் 2 நாள்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்!
Special Voter Registration Camp : சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொது மக்கள் பங்கேற்று தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை சேர்த்து கொள்ளலாம் .

சென்னையில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்
தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், உயிரிழந்தவர்கள், வேறு முகவரிக்கு இடம் மாறி சென்றவர்கள், இரு இடங்களில் வாக்குரிமை வைத்திருந்தவர்கள் என சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். இது குறித்த தகவல் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக கடந்த ஜனவரி 18- ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென இந்த அவகாசம் இந்த மாத இறுதி வரை, அதாவது ஜனவரி 30- ஆம் தேதி வரை ( வெள்ளிக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
16 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு முகாம்
இதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வருகிற ஜனவரி 24, 25- ஆம் தேதிகளில் ( சனி, ஞாயிறு) சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் மற்றும் 18 வயதை பூர்த்தி செய்த இளம் வாக்காளர்கள் படிவம் 6- ஐ பூர்த்தி செய்து உறுதிமொழி படிவத்துடன் இணைத்து தங்களது பெயர்களை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: பலூனுக்கு காற்று நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து – 3 பேர் பரிதாபமாக பலி – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பெயர் மாற்றம்-முகவரி மாற்றம் உள்ளிட்டவை
இதே போல, ஒரு சட்டப் பேரவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7- ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பிடுதல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றுதல் என்பன உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் படிவம் 8- ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பிப்ரவரி 17-இல் வாக்காளர் இறுதி பட்டியல்
அதன்படி, இந்த விண்ணப்பங்கள் மீது துறை ரீதியான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும். இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் பிப்ரவரி 17- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் ஏராளமான வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் விதமாக வாக்காளர் பெயர் சேர்ப்புக்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதுடன், சிறப்பு முகாமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா…2 கரும்பு ரூ.81 ஆயிரத்து ஏலம்!