ஏப்ரல் 2, 2026: சாத்தான்குளத்தில் தந்தை–மகன் காவல் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கில் இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டு வரக்கூடிய ஆறாம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை 2020ஆம் ஆண்டு, அதாவது கொரோனா காலகட்டத்தில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது கொடூரமாக தாக்கியதில், அவர்கள் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இந்த வழக்கு தமிழகத்தையே குலுக்கியது.
சிபிஐ விசாரணை – 9 பேரும் குற்றவாளிகள்:
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதில், அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது காவல்துறையினர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய்.. திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற போது பரபரப்பு!!
இந்த வழக்கில் முழு விசாரணையும் முடித்து, கடந்த மாதம் 23ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், கைது செய்யப்பட்ட 9 காவல்துறையினரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். இந்த ஒன்பது பேருக்கும் வழங்கப்படும் தண்டனை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், தண்டனை தொடர்பாக மத்திய அரசு விசாரணை அமைப்பான சிபிஐ மற்றும் மாநில அரசு தங்களது நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விவரம்:
ஆனால், இந்த வழக்கு கடந்த 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை; மேலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதனால், இந்த வழக்கு ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் படிக்க: இனி கடைசி நிமிட பதட்டம் இல்லை – 30 நிமிடத்தில் ஏறும் இடத்தை மாற்றலாம்!
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்தால் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரக்கூடிய ஆறாம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி இருவரையும் கொலை செய்துள்ளதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஒன்பது பேருக்கும் உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பொதுவாக காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் இருக்காது. ஆனால், இந்த வழக்கில் மூன்று பேர் நேரடி சாட்சிகளாக உள்ளனர் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்த வழக்கில் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் எந்த மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து வரக்கூடிய ஆறாம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.