Anbumani Ramadoss: யாருக்கும் யாரும் அடிப்பணிந்தவர்கள் கிடையாது.. அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளிடம் பேச்சு!
PMK Internal Rift: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது. ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களை நீக்கியதாக அறிவித்த நிலையில், அன்புமணி, பொதுக்குழுவால் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன் 1: பாட்டாளி மக்கள் கட்சிக்குள் (Pattali Makkal Katchi) நிறுவனர் ராமதாஸூக்கும் (Ramadoss), தலைவர் அன்புமணி ராமதாஸூக்கும் (Anbumani Ramadoss) இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 3 நாட்களாக சென்னையில் உள்ள சோழிங்கநல்லூரில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்தநிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் பாமக நிர்வாகிகளை, பாமக நிறுவனர் ராமதாஸ் பதவியில் நீக்கி உத்தரவிட்டு வருகிறார். இதை தொடர்ந்து, 2025 ஜூன் 1ம் தேதியான 3வது நாளான இன்றும் அன்புமணி ராமதாஸ் சென்னை – கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளை சந்தித்தார்.
பொதுக்குழுவால் தேர்வான தலைவர்தான் – அன்புமணி ராமதாஸ்
பாமக நிர்வாகிகளுடன் 3வது நாளான இன்றும் உரையாடிவரும் அன்புமணி ராமதாஸ், “ நிர்வாகிகளை நீக்கி வெளியாகும் அறிவிப்புகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதெல்லாம், விரைவில் சரியாகிவிடும். எதிர்காலத்தை நோக்கி நாம் வேகமாக பயணிப்போம், முன்னேறுவோம். நிர்வாகி ஒரு பாமகவில் நிரந்தர தலைவர் வேண்டும் என்று குரல் கொடுத்தார். இங்கு அதற்கான விளக்கத்தை கொடுக்க விரும்புகிறேன், நிரந்தர தலைவர் என்று இங்கு யாரும் கிடையாது. நமது கட்சி ஜனநாயக கட்சி, பொதுக்குழு முடிவு செய்துதான் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.




பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள்தான் தலைவராக இருக்க முடியும். பொறுப்பையும், அதிகாரத்தையும் அவர்கள்தான் பெறுவார்கள். தேர்தல் ஆணையமும் அவர்களுக்குதான் முன்னுரிமை கொடுத்துள்ளது. பொதுக்குழு மூலம் இன்றைக்கு என்னை நீங்கள் தலைவராக தேர்வு செய்துள்ளீர்கள். இருப்பினும், உங்களுடன் இணைந்து நான் ஒரு தொண்டனாகதான் செயல்பட்டு கொண்டு இருக்கிறேன். யாருக்கும் யாரும் அடிப்பணிந்தவர்கள் கிடையாது, என்னுடைய சக தோழன். இப்படிதான் ஒரு இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும், வளர்க்க முடியும். நான் பெரியவன், நீ சிறியவன் என்று நான் எப்போதும் நினைத்தது கிடையாது. எல்லாரும் நம்முடைய சகோதரர்கள்தான்.
பொதுக்குழுவால் தேர்வான தலைவர் நான்தான்:
சென்னை – கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டியில் நடைபெற்ற தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கி, புதிய கிளைகளை உருவாக்குவதற்கும், புதிய… pic.twitter.com/amMWGgTRaM
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 1, 2025
பாட்டாளி மக்கள் கட்சி எல்லா சமுதாயத்திற்குமான கட்சி, எல்லா மதத்திற்கு சார்ந்த கட்சி. இதுதான் நம்முடைய அடித்தளம். பாமகவில் பொதுச்செயலாளரும் சரி, பொருளாளரும் சரி தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான். இது வேறு எந்தவொரு கட்சியிலும் இருக்கிறதா, நம் கட்சியில் மட்டுமே உள்ளது. நாம் கடந்த காலத்தில் மக்களுக்காக என்ன செய்துள்ளோம் என்பதை மக்களுக்கு எடுத்து சொல்லி, இனி வரும் காலங்களிலும் மக்களுக்காக என்ன செய்யப்போகிறோம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
அதனால், நீங்கள் தைரியமாக செயல்படுங்கள். கட்சிக்குள்ளும் சரி, வெளியேயும் உங்களுக்கு எதுவும் நடக்காமல் சரி நான் பார்த்து கொள்கிறேன். அதன்படி, பாமக பொதுக்குழுவால் தேர்வான தலைவர் நான்தான். எனவே, நிர்வாகிகளை நீக்கவோ, சேர்க்கவோ என்னால் முடியும்” என்று தெரிவித்தார்.