‘வருடம் குறிப்பிடவில்லை.. அதிமுக கூட்டணி தொடருமா..’ பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
DMDK Chief Premalatha Vijayakanth : தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படாத நிலையில், அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அப்போது, அதிமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கடலூரியில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்போம். தேர்தலை நோக்கி தான் தேமுதிகவின் அரசியல் நகர்வும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூன் 01 : மாநிலங்களவை தேர்தலில் (Rajya Sabha election 2025) தேமுதிகவுக்கு அதிமுக சீட் ஒதுக்கப்படவில்லை. மேலும், 2026ஆம் ஆண்டு மாநிலங்களவை சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் என அதிமுக (AIADMK Rajya sabha candidates) அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (DMDK Chief Premalatha vijayakanth) பேட்டி அளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த், “திமுக செயற்குழுவில் விஜய்காந்த் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கேப்டன் மறைவில் முதலமைச்சர் நின்று செய்ததை மறக்க மாட்டோம். ராஜ்யசபா சீட் 2026ஆம் ஆண்டு தரப்படும் என அதிமுக சார்பில் அறிவிப்பு வந்து இருக்கிறது.
பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
கடந்த 2024 தேர்தலின் போதே ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாக அதிமுக கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை. அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்கத் தெரிவித்தோம்.




ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்தார். தேர்தலை நோக்கியே அதிமுக முடிவு எடுத்து வருகிறது. தேர்தலை ஒட்டிய அரசியல் நகர்வு இருப்பதால், எங்களின் நிலைபாடும் அப்படியே இருக்கும்.
2026 சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து அதிமுக செயல்படுகிறது. தேமுதிகவும் அவ்வாறே செயல்படும். தேமுதிகவின் நிலைபாடு, அதிமுகவில் தேமுதிக தொடருமா என்பது குறித்தும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடலூர் மாவட்டத்தில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம்” இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தராத அதிமுக
மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக… pic.twitter.com/Euk5YttrCd
— Saravanakumar(AsK) – SayYesToWomenSafety& AIADMK (@saraditoo7) June 1, 2025
தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் பி.வில்சன், சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக 2025 ஜூன் 1ஆம் தேதியான இன்று தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி, அதிமுகவை சேர்ந்த தனபால் மற்றும் இன்பதுரை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. 2024 லோக்சபா தேர்தலின்போது எழுத்துப்பூர்வமாக ராஜ்சயபா சீட் தருவதாக, அதிமுக எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார்.
இருப்பினும், அதிமுக அதற்கு மவுனம் காத்து வந்தது. இதனால், தேமுதிகவுக்கு ராஜ்சயபா சீட் கிடைக்குமா என்ற குழப்பம் நிலவி வந்தது. அதன்படியே, தேமுதிவுக்கு அதிமுக சீட் கொடுக்கப்படவில்லை. இதனால், தேமுதிக விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.