தேர்தல் நடத்தை விதிகளில் ஆம்புலன்ஸும் தப்பவில்லை… புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.. முழு விவரம் இதோ!
TN Legislative Assembly Election Rules: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த விதிகளின் கீழ், 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், நோயாளிகள் அதிக பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15- ஆம் தேதி வெளியான நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதில், வேட்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் செல்ல கூடாது எனவும், அவ்வாறு எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருக்கும் உறவினர்கள் அதிக அளவு பணம் கொண்டு செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, கொண்டு செல்லப்படும் பணம் தொடர்பான விவரம் ஆகியவை ஆவணத்தில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், ஆம்புலன்ஸில் பணி நேரத்தில் இருக்கும் ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் அதை தவிர்த்து அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. மேலும், தனியார் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் சார்பில் தமிழக முழுவதும் சுமார் 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: சிபிஐ விசாரணை கேட்டது விஜய் தான் – நீதிமன்றம் சென்றது சரியில்லை – பவன் கல்யாண் பரபரப்பு கருத்து




தேர்தல் நடத்தை விதிகள் அடங்கிய நோட்டீஸ்
இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் தேர்தல் கட்டுப்பாடு தொடர்பான விதிகள் அடங்கிய நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் தேர்தல் நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் தவிர வேறு எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. இதே போல, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தவிர அனுமதி பெறாமல் வேறு எவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அழைத்துச் செல்லக்கூடாது. அவசர ஊர்திகளை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் அங்கீகாரம் பெற்ற அரசு ஊழியர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே ஆய்வு செய்வார்கள்.
ஆம்புலன்ஸில் வரும் நபர்களை கண்காணிக்க வேண்டும்
இதே போல, அவசர ஊர்திகளில் வரும் நோயாளிகள் அல்லது அவர்களுடன் வரும் நபர்கள் ஆம்புலன்ஸில் உள்ள பெட்டிகள் அல்லது உபகரணங்கள் ஆகியவற்றை திறக்காமல் இருப்பதை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். ஏனென்றால், அதன்மூலம் மறைமுகமாக பணம் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்வது தடுக்கப்படும். ஆம்புலன்ஸில் வரும் நபர்கள் தேர்தல் தொடர்பான ஏதேனும் பொருட்கள் வைத்திருந்தால் அவற்றுக்கு அனுமதி கிடையாது. ஆம்புலன்ஸில் தேர்தல் பிரச்சார ஸ்டிக்கர்கள் மற்றும் சின்னங்கள் ஒட்டக்கூடாது. என்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் மாநில தலைவர் செல்வகுமார் மற்றும் மண்டல தலைவர் முகமது பிலால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை கேள்வி..