Cuddalore: பார்க்கிங் பிரச்னை.. முதியவர் கொலை.. கடலூரில் ஷாக் சம்பவம்!
Cuddalore Crime News: கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த மனோகர், வாகன நிறுத்தம் தொடர்பான தகராறில் கந்தன், கார்த்திகேயன், மீனாட்சி ஆகியோரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். தினமும் வாகனத்தை கந்தன் வீட்டு அருகே நிறுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதம், கொலை வரை சென்ற பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலையான மனோகர்
கடலூர், ஆகஸ்ட் 25: வாகன நிறுத்தம் தொடர்பான பார்க்கிங் பிரச்சனையில் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். வண்டிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நெசவு ஆலையில் வேலை பார்த்து வந்த மனோகர் தனது வேலைக்கு செல்லும்போது தனது இரு சக்கர வாகனத்தை நெசவு பட்டறைக்கு அருகே வசிக்கும் கந்தன் என்பவரது வீட்டின் பக்கத்தில் நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் வாகனத்தை இங்கே நிறுத்தக்கூடாது என கந்தன் குடும்பத்தினர் மனோகரை எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனை கண்டு கொள்ளாத மனோகர் தினமும் வாகனத்தை கந்தன் வீட்டு அருகே நிறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனோகர் மீது கந்தன் குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
முற்றிய வாக்குவாதத்தால் உயிரிழப்பு
இதனால் கடந்த சில நாட்களாக அவர்களுக்குள் வாக்குவாதம் உள்ளிட்ட தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்படியான நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மனோகர் வழக்கம் போல வேலைக்கு வந்த நிலையில் தனது வாகனத்தை கந்தன் வீட்டு அருகே நின்று நிறுத்திவிட்டு பணிக்கு சென்று விட்டார். மாலையில் 4.30 மணியளவில் மீண்டும் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது கந்தனுக்கும் மனோகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
Also Read: தந்தை கண்முன்னே கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெண்.. மார்க்கெட்டில் இளைஞர் செய்த வெறிச்செயல்!
அப்போது கந்தன், அவரது உறவுக்காரர் மற்றும் கந்தனின் மனைவி மீனாட்சி ஆகிய மூன்று பேர் சேர்ந்து மனோகரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து மனோகரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மனோகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை வழக்கில் 3 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மனோகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கந்தன் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இந்த விசாரணையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கந்தன் மற்றும் அவரது உறவினரான கார்த்திகேயன் ஆகியோர் மனோகரை கீழே தள்ளிவிட்டதாகவும் இதில் அவரது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.
Also Read: காலா பட நடிகையின் சகோதரர் கொடூர கொலை… டெல்லியில் பயங்கரம்.. நடந்தது என்ன?
இதற்கிடையில் மனோகர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.