‘ஒப்பந்தப் பணியை ஊக்குவிக்கும் புதிய தொழிலாளர் சட்டம்’.. தலைவர்கள் கண்டனம்!
இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவின் பழைய 29 தொழிலாளர் சட்டங்களை ஒரே வடிவத்தில் மாற்றுகின்றன. இது இந்தியாவின் வேலை விதிகளை நவீனத்துவம் செய்யும் வகையிலும், எதிர்காலத்தில் புதிய வேலை வடிவத்துக்கு நாட்டைத் தயாராக்குவதற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது மத்திய அரசு கூறுகிறது.

செல்வப்பெருந்தகை, திருமாவளவன், பெ.சண்முகம்
சென்னை, நவம்பர் 23: மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதாக காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை தொகுத்து, புதிதாக 4 புதிய தொழிலாளர் சட்டங்களை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தொழிலாளர் சீர்திருத்தமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய சட்ட கட்டமைப்பு, பல தசாப்தங்களாக பழமையான, சிதறியுள்ள விதிகளை சுலபமாக்குதல், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துதல், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துதல், தொழிலாளர் நடைமுறைகளை உலகளாவிய சிறந்த முறைகளுக்கு இணையாகக் கொண்டு வருதல் ஆகியவற்றை முதன்மை இலக்காக வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் சட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க : ஆளுநரின் அதிகாரம்… தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம் – குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்கு பதில்!
உரிமைகளை பறிக்கும் முயற்சி – செல்வப்பெருந்தகை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது, மொத்தம் 44 தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களில் 15 சட்டங்களை முழுமையாக ரத்து செய்து, மீதமுள்ளவற்றை 29 ஆக குறைத்து, அதையும் நான்கு பெரிய சட்டத் தொகுப்புகளாக மாற்றியுள்ளது மத்திய அரசு. இது தொழிலாளர்களின் போராட்டங்களால் கிடைத்த பாரம்பரிய உரிமைகளை பறிக்கும் முயற்சியாகும். இந்த சட்டங்கள் பெருநிறுவனங்கள் மற்றும் கோடீஸ்வரர்களுக்கே ஆதரவாக உள்ளன. எனவே தொழிலாளர் நலன்களுக்கு எதிரான இந்த மாற்றங்களை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஒப்பந்தப் பணியை ஊக்குவிக்கிறது – திருமாவளவன்:
விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, புதிய சட்டங்கள் அனைத்து துறைகளிலும் ஒப்பந்தப் பணியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதால், இந்திய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். பெண்கள் இரவுப் பணிகளில் மற்றும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகள் நீக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் சங்கங்கள் அமைப்பதற்கான உரிமையையும், ஒருங்கிணைந்து போராடும் உரிமையையும் குறைக்கும் வகையில் இந்த சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தொழிலாளர் எதிர்ப்பு நடவடிக்கைகளாகும் என்றும் அவர் விமர்சித்தார்.
உரிமைகள் பாதிக்கப்படும் – மு. வீரபாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது, இந்த நான்கு புதிய சட்டத் தொகுப்புகள் அமல்படுத்தப்பட்டால், நாட்டில் நிரந்தர பணியாளர்கள் குறைந்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகரிப்பர். எந்த காரணமுமின்றி பணிநீக்கம் வாய்ப்பு கிடைக்கும். ஊதியப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு, சங்கச் சேர்க்கை உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும். தொழிலாளர்களின் சட்ட ரீதியான நலன்களை மறுக்கும் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணமகள்.. மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்!
தினக்கூலிகளாக மாற்றப்படுவார் – பெ. சண்முகம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது, புதிய சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களை நவீன காலத்தில் அடிமைப் பணியாளர்களாக மாற்றும் அபாயம் கொண்டவை. நிரந்தர பணியாளர்கள் குறைக்கப்படுவதால் அவர்கள் தினக்கூலிகளாக தள்ளப்பட்டுவிடுவார்கள். இது தொழிலாளர் நலன்களை கூர்மையாக தாக்கும் நடவடிக்கை. எனவே இந்த தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றார்.