மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு தேதி எப்போது தெரியுமா?
Madurai AIIMS Hospital: மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவமனைக்கான பணிகள் 80 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முழு பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த 2015- ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது. அதன்படி, மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான அறிவிப்பு கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2019- ஆம் ஆண்டு மருத்துவமனை கட்டுமான பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர், மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இது பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பலதரப்பட்ட தரப்பினர் இடையே பேசும் பொருளாக மாறியது. தேர்தல் நேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாதது குறித்து திமுகவினர் பிரச்சாரம் செய்தனர்.
மருத்துவமனைக்கான இடம் கையகப்படுத்தும் பணி
இதன் பின்னர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய குழு மற்றும் ஜப்பானிய நீதி குழுவினர் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுற்று சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளன.
மேலும் படிக்க: நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கார்கள்.. 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம்!




மருத்துவமனை கட்டுமானத்தில் 80 சதவீதம் நிறைவு
இதே போல மருத்துவமனை வளாகத்துக்கான வகுப்பறை கட்டடம், மருத்துவ கல்விசார் கட்டடம், செவிலியர் கல்லூரி, விடுதி கட்டடம், மருத்துவக் கல்லூரி, ஆசிரியர்கள் குடியிருப்புகள், மாணவ மாணவிகளுக்கான தனி விடுதிகள், உணவகம், விளையாட்டு கூடம், அவசர சிகிச்சை பிரிவு, உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கான வார்டுகள் உள்ளிட்டவை கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், 80 சதவீத பணிகள் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ் கல்லூரியை கொண்டு வர நடவடிக்கை
அதன்படி, 2026 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை நாளில் மதுரை எய்மஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் தெரிவித்திருந்தார். அதற்கேற்றவாறு இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், முதல் கட்டமாக வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவை திறக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, மற்ற பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பு கட்டடங்கள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை மதுரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:இந்தியாவில் ஒரே ஆண்டில் சாலை விபத்தில் 1.77 லட்சம் பேர் மரணம்!