திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்… மதுரை அமர்வு பரபரப்பு தீர்ப்பு!
Thiruparankundram Deepathoon Issue: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான மேல் முறையீட்டு மனு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த நாளில் தீபம் ஏற்றப்படவில்லை. மீண்டும் நீதிபதி உத்தரவின் பேரில் தீபம் ஏற்ற சென்ற போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு என மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த பரபரப்பு தீர்ப்பு
இந்த வழக்கானது நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், சமூக அமைதி சீர்குலையும் என்றும் தமிழக அரசு தனது வாதத்தை முன் வைத்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு: அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல்படக்கூடாது.
மேலும் படிக்க: தடம் புரண்டு விபத்துக்குள்ளான முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!
தமிழக அரசின் மனு தள்ளுபடி
பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது தவறாகும். தீபத்தூணில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்க கூடாது. இந்த தீபத்தூண் இருக்கும் பகுதியானது திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமானது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்
தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டம் மற்றும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் தற்போது பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பழைய சாதத்தில் இவ்வளவு நன்மைகள்.. ஆய்வு முடிவு குறித்து பேசிய அமைச்சர்!



