காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது – எல்.கே சுதீஷ் பகிர்ந்த தகவல்..
DMK - DMDK: சென்னையில் ஜூன் 29, 2025 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி டி.ஆர் பாலு மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் இருவரும் கலந்துக்கொண்டனர். 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சென்னை, ஜூன் 30, 2025: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திசை மாறாத தேசிய பறவை சி.கே.பெருமாளின் 80 ஆவது பிறந்தநாள் விழாவை ஓட்டி, உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை என்னும் நூல் வெளியீட்டு விழா மற்றும் அரசியலில் 60 ஆண்டுகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சபாநாயகர் அப்பாவு, திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கபாலு, திருநாவுகரசர் மற்றும் சி.கே.பெருமாளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள நிகழ்வின் மேடையில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் அவர்களும் அமர்ந்து இருந்தார்.
தம்பி என அழைக்கவா? சுதீஷிடம் கேட்ட டி.ஆர். பாலு:
இந்நிகழ்ச்சியில், மேடையில் பேச தொடங்கிய போது திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஐ பார்த்து தம்பி என கூப்பிடலாமா என இரு முறை கேட்டார்.
அதன் பின்னர் இல்லையென்றால் வேறு ஏதாவது போட்டுவிட போகிறார்கள் என தெரிவித்த உடன் அரங்கம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. பின்னர் பேசிய எம்.பி டி.ஆர்.பாலு, “ எனது நண்பர் சி.கே.பெருமாள் தொடக்க காலத்தில் வேறு ஒரு இயக்கத்தில் இருந்தார். அதாவது தேசிய இயக்கமாக இருந்தது. நான் மாநில அளவிலான இயக்கத்தில் இருந்தேன். இப்போதும் நாங்கள் நண்பர்களாகவே தொடர்கிறோம் என தெரிவித்தார்.
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க முயற்சி – எல்.கே. சுதீஷ்:
பின்னர் இந்த புத்தக வெளீயிட்டு விழாவில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், “ 30 ஆண்டுகள் நட்பு எங்களுக்குள் உள்ளது. என்னுடைய தந்தை காமராஜர் விசுவாசி ,கேப்டன் குடும்பம் எங்கள் குடும்பம் என காங்கிரஸ் பின்னணியில் இருந்து வந்துள்ளோம். கேட்பன் குடும்பம் காங்கிரஸ் பின்னணியில் இருந்து தான் வந்தது. எங்கள் கட்சி உருவானபோது காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என அப்போதே 1 ராஜ்ய சபா சீட் 9 நாடாளுமன்ற இடம் எல்லாம் பேசபட்டது. ஆனால் அப்போது அந்த கூட்டணி அமையவில்லை எனவும் கூட்டணி உருவாக சூழலை ஏற்படுத்த முழுகாரணம் தங்கபாலு மற்றும் சி.கே.பெருமாள் தான் எனவும் தெரிவித்தார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேப்டன் மீது தனி அன்பு கொண்டவர் அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட அடிக்கடி வீட்டில் வந்து உரிமையோடு பார்த்து செல்வார். கேப்டனுக்கு காங்கிரஸ் மீது எப்போதும் ஒரு தனிப்பிரியம் உண்டு. நான் இதற்கு போல் பேசினால் அது அரசியல் ஆகிவிடும்” என குறிப்பிட்டு பேசினார்.
தேமுதிக – திமுக கூட்டணி?
திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் கலந்து கொண்டார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை தேமுதிக அறிவிக்காத நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.