Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kanimozhi: பாஜகவுடன் சேர்ந்து அதிமுக செய்யும் துரோகம்.. முருகன் மாநாடு குறித்து கனிமொழி எம்.பி கருத்து!

Madurai Murugan Manadu: 2025 ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாடு பெரியார், அண்ணாதுரை போன்ற திராவிட தலைவர்களை விமர்சித்ததால் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது. அதிமுக தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திராவிட மாதிரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கூறியது கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது. அதிமுகவின் இந்த நடவடிக்கை திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Kanimozhi: பாஜகவுடன் சேர்ந்து அதிமுக செய்யும் துரோகம்.. முருகன் மாநாடு குறித்து கனிமொழி எம்.பி கருத்து!
கனிமொழி எம்பிImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 24 Jun 2025 20:58 PM

சென்னை, ஜூன் 24: கடந்த 2025 ஜூன் 22ம் தேதி மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாடு (Madurai Murugan Manadu)  எந்த அளவிற்கு விமரிசையாக நடைபெற்றதோ, அதே அளவிற்கு தற்போது விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த மாநாட்டின்போது திராவிட இயக்க தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணாதுரை உள்ளிட்ட பெரும் தலைவர்கள் விமர்சிக்கப்பட்டதாக காட்சிகள் வெளியானது. இந்த முருகன் மாநாட்டில் அதிமுக (AIADMK) முக்கிய தலைவர்கள், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக இந்து அமைப்பு தலைவர்களும், சிறப்பு விருந்தினரான ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் (Pawan Kalyan) மேடையில் திராவிட மாடல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக முக்கிய தலைவர்கள் பங்கேற்பு:

பாஜகவின் கூட்டணி கட்சியின் அழைப்பை மதித்து அதிமுக மூத்த நிர்வாகிகளான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா, கடம்பூர் ராஜூ மற்றும் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, திராவிட கட்சியான அதிமுக தலைவர்கள், முருகன் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றபோது பெரியார், அண்ணா போன்ற முக்கிய தலைவர்கள் விமர்சனம் செய்யப்பட்டனர். இருப்பினும், அதிமுக தலைவர்கள் ஏன் மாநாட்டில் கேள்வி எதுவும் எழுப்பவில்லை என்று திமுகவை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பினர். இதன்பிறகு, அதிமுக தலைமை, அதிமுக துணை பொதுச்செயலாளர் ஆர்.பி.உதயக்குமார், கே.டி.பாலாஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

அதிமுகவை சாடிய கனிமொழி:

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் எம்.பி கனிமொழி பேசுகையில், “அதிமுக தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று. அதேநேரத்தில், இன்னும் ஒரு படி மேலே சென்று பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய ஒரு இடத்திலேயே அவர்களும் இருந்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அதிமுக யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இனிமேல் திராவிட இயக்கத்திற்கும் அதிமுகவிற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ளும் அளவிற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தக் குழப்பம் கட்சிக்குள் சூடுபிடித்துக்கொண்டிருந்த வேளையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படும் எஸ்.பி.வேலுமணி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். திராவிட அமைப்புகளின் விமர்சனங்கள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கூர்மையான கேள்விகளை எழுப்பியபோது, ​​வேலுமணி இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தியுள்ளார் என்றும், அதனுடன் சேர்க்க எதுவும் இல்லை என்றும் சுருக்கமாக பதிலளித்தார்.