AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!

Red Alert: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில தினங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், குறிப்பாக மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை!
கோப்புப் புகைப்படம்Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 29 May 2026 13:51 PM IST

தமிழகத்தின் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருந்தது. சென்னை விமான நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 41.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கன்னியாகுமரியில் 23.2 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் உதகமண்டலத்தில் 12.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனினும், அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதால் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

வளிமண்டல சுழற்சி மற்றும் அடுத்த ஏழு தினங்களுக்கான மழை முன்னறிவிப்பு

தற்போது தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வெவ்வேறு உயரங்களில் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, மே 29 அன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 30 முதல் ஜூன் 1 வரை தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும். இக்காலக்கட்டத்தில் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். ஜூன் 2 முதல் ஜூன் 4 வரை தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு மற்றும் மாறுதல்கள்

மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது, எனினும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும். சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. கடலோர தமிழகத்தில் அதிக வெப்பமும், அதிக ஈரப்பதமும் ஒன்றாக நிலவுவதால் பொதுமக்கள் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனால், மே 31 முதல் ஜூன் 2 வரை நிலவப்போகும் பரவலான மழை காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து மீண்டும் இயல்பு நிலையை ஒட்டி இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்றும் சூறாவளிக்காற்று வீசும் பகுதிகள்

மே 29 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதேபோன்று அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us