சொத்து வரி செலுத்தவில்லையா? சென்னை மாநகராட்சி தரப்பில் இன்று முதல் சிறப்பு முகாம்.. எங்கெல்லாம் தெரியுமா?
ஆன்லைனில் வரி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டவர்கள் மற்றும் சொத்து விவரங்களில் திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் வரி செலுத்த முடியாதவர்களின் வசதிக்காக தற்போது இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் மாநகராட்சி அலுவலர்கள் நேரடியாக இருந்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதுடன், வரி கணக்கீடு, நிலுவைத் தொகை விவரம், சொத்து பதிவுகள் தொடர்பான உதவிகளையும் வழங்க உள்ளனர்.
ஜூலை 3, 2026: சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியை வசூலிக்கும் நோக்கில், இன்று (ஜூலை 3) முதல் வருகிற ஜூலை 17-ஆம் தேதி வரை சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி வரி வசூல் மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில், சொத்து உரிமையாளர்கள் தங்களது நிலுவை சொத்துவரியை நேரடியாகச் செலுத்தலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் சொத்து வரி வசூல்:
சென்னையில் சொத்துவரி உள்ளிட்ட மாநகராட்சி வரிகள் ஆண்டுதோறும் இரண்டு தவணைகளாக வசூலிக்கப்படுவது வழக்கமாகும். ஒவ்வொரு நிதியாண்டிலும் வரி வசூலுக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை முழுமையாக எட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
இந்த ஆண்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பெருமளவில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் காரணமாக வீடு தோறும் சென்று வரி வசூலித்தல், நிலுவை வரி செலுத்தாதவர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முழுமையாக மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சொத்துவரி வசூலில் ஓரளவு பின்னடைவு ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மாற்று ஏற்பாடாக, டிஜிட்டல் முறையில் வரி வசூலிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. இதன்படி, சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு நிலுவை வரி தொடர்பாக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டதுடன், இணையதளம் மற்றும் ஆன்லைன் வசதிகள் மூலம் வரி செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
சொத்து வரி செலுத்த இன்று முதல் சிறப்பு முகாம்:
எனினும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறியவர்கள், ஆன்லைனில் வரி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டவர்கள் மற்றும் சொத்து விவரங்களில் திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் வரி செலுத்த முடியாதவர்களின் வசதிக்காக தற்போது இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: “கரூரில் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்”.. திமுகவை கடுமையாக சாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!
இந்த முகாம்களில் மாநகராட்சி அலுவலர்கள் நேரடியாக இருந்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதுடன், வரி கணக்கீடு, நிலுவைத் தொகை விவரம், சொத்து பதிவுகள் தொடர்பான உதவிகளையும் வழங்க உள்ளனர்.
எனவே, இதுவரை சொத்துவரி செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, தங்களது நிலுவை வரிகளை விரைந்து செலுத்தி அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்களைத் தவிர்க்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.