அதிக வட்டி தருவதாகக் கூறி கைவரிசை.. 800க்கும் மேற்பட்டோரிடம் கோடி கணக்கில் மோசடி.. தலைமறைவான பெண் கைது!!
Absconding Woman Arrested in trichy: இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய்கிருஷ்ணனின் மனைவி சாந்தினி, திருச்சி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று திருச்சிக்கு விரைந்து சென்று சாந்தினியை அதிரடியாகக் கைது செய்தனர்.

கைதான பெண்
சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி, சுமார் 800க்கும் மேற்பட்டோரிடம் 13 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி சாந்தினியைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் காதைக்கிணறு, கிளாசிக் நகரைச் சேர்ந்தவர் விஜய்கிருஷ்ணன் (32). இவருடைய மனைவி சாந்தினி (29). இந்தத் தம்பதியினர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். தங்கள் நிறுவனத்தில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்குத் தொடங்குபவர்களுக்கும், குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வைப்புத்தொகை (Fixed Deposit) செலுத்துபவர்களுக்கும் சந்தை விலையை விட அதிக வட்டி வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினர்.
இதையும் படிக்க: வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. வரதட்சணை கொடுமையால் நிகழ்ந்ததா.. இருவர் கைது – போலீசார் விசாரணை!
வெளிச்சத்திற்கு வந்த மோசடி:
இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் மாதாந்திர சீட்டு மற்றும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் (44) என்பவர், இந்த நிறுவனத்தின் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்திருந்தார். ஓராண்டு முடிவில் அவருக்கு ரூ.36 ஆயிரம் முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலம் முடிந்த பிறகும் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முனீஸ்வரன், இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை மற்றும் கைது நடவடிக்கை:
முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விஜய்கிருஷ்ணன், அவரது மனைவி சாந்தினி மற்றும் நிறுவனத்தின் பங்குதாரர்களான ஊட்டியைச் சேர்ந்த ரமேஷ் (48), மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி (53), ஜெய்கணேஷ் (45) உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் இணைந்து மொத்தம் 842 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 13 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜய்கிருஷ்ணன் மற்றும் ரமேஷ் உட்பட 4 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். மற்றவர்கள் தலைமறைவானதால் அவர்களைப் பிடிக்க வலைவீசப்பட்டது.
இதையும் படிக்க: மகன் மரணத்தில் நாடகம்.. போலீசாரையே குழப்பிய தாய்.. கடைசியில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சிக்கினார்!
தலைமறைவாக இருந்த பெண் கைது:
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய்கிருஷ்ணனின் மனைவி சாந்தினி, திருச்சி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாகப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று திருச்சிக்கு விரைந்து சென்று சாந்தினியை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி மதுரையில் உள்ள பெண்களுக்கான மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மேலும், இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மீதமுள்ள 3 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.