AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விழுப்புரம் சிறுமி பாலியல் சீண்டல்.. பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால் அவற்றை மீண்டும் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் சிறுமி பாலியல் சீண்டல்.. பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 May 2026 21:39 PM IST

மே 24, 2026: எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால் அவற்றை மீண்டும் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்-க்கு வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு எங்கே – எடப்பாடி பழனிசாமி கேள்வி:

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றொரு தி.மு.க. ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே, தொடங்கிவிட்டது.

இன்றைய முதலமைச்சரின் கூற்றுப்படியே கேட்கப் போனால், தங்களது ‘கல்லாப்பெட்டி கூட்டணி’யை தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு எங்கே?

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால் அவற்றை மீண்டும் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரம் – 11 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள நடுக்குப்பம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (62). இவர் ஆசாரி வேலை செய்து வருவதுடன், கால்நடைகளையும் வளர்த்து பராமரித்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.. வி.சி.கவில் இருந்து பனையூர் பாபு விலகல்..

அவ்வழியாக சென்ற 11 வயது சிறுமியை அழைத்த அவர், கையில் பணம் கொடுத்து அருகில் உள்ள கடையில் இருந்து வடை வாங்கி வருமாறு கூறியுள்ளார். சிறுமியும் அவரது பேச்சைக் கேட்டு கடைக்கு சென்று வடை வாங்கி வந்துள்ளார். பின்னர், ஒரு வடையை சிறுமிக்கு கொடுத்து சாப்பிடச் சொல்லியுள்ளார்.

சிறுமி அவரது அருகில் அமர்ந்து வடை சாப்பிட்டு கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த முதியவர் சிறுமியிடம் தவறான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து பயந்து ஓடி தப்பித்துள்ளார்.

போக்ஸோ சட்டத்தின் கீழ் முதியவர் சிறையில் அடைப்பு:

வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக முயன்ற கன்னியப்பனை பிடித்து விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us