மே 9, 2026: தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரைப் பேரம் தற்போது நடைபெற்று வருவதாக, தமிழக வெற்றி கழகம் மீது திமுக எம்பி வில்சன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், தற்போது ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், தற்போது வரை 116 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுக்கக்கூடிய முடிவைப் பொறுத்தே இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரும் பட்சத்தில், விஜய் முதலமைச்சராக பதவியேற்க முடியும். இல்லையெனில் அதில் சிக்கல் ஏற்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
குதிரை பேர குற்றச்சாட்டை முன்வைத்த டிடிவி தினகரன்:
இந்த நிலையில், திடீரென அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியின் எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்றும், தமிழக வெற்றி கழகம் போலியான கடிதத்தை கொடுத்திருப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு 12 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக எம்எல்ஏ காமராஜ், டிடிவி தினகரன் உடன் இருந்தார். அப்போது பேசிய அவர், “நான் புதுச்சேரியில் தங்கி இருந்தேன். எனது மொபைல் எண்ணுக்கு மாலை 6 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக இது தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசி என்ன செய்யலாம் என முடிவு செய்தோம். நான் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரவில்லை. அந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது” என தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம் தரப்பில் காமராஜ் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இது மேலும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாற்றம் என்பதற்கான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது:
இத்தகைய சூழலில், “தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் நடைபெறாத குதிரைப் பேரம் தற்போது நடைபெற்று வருகிறது” என திமுக எம்பி வில்சன் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அவர்கள் சொன்னதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரைப் பேர முயற்சிகளை தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. இத்தனையும் பதவியேற்பதற்கு முன்பே நடக்கிறது” என தெரிவித்துள்ளார்.