காங்கிரஸை கை காட்டுவதா?.. “எங்க வேதனையை புரிஞ்சுக்கோங்க”.. ஆதங்கத்தை கொட்டிய செல்வப்பெருந்தகை!!
DMK alliance seat sharing issue: திமுக கூட்டணியில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுகவோ கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதை காரணம் காட்டி, இரண்டு கட்சிகளையும் சேர்த்து ஒற்றை இலக்கத்தில் முடித்துக்கொள்ள நிர்பந்திப்பதாக தெரிகிறது.

செல்வப்பெருந்தகை
சென்னை, மார்ச் 16: காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஏன் கூடுதல் தொகுதிகள் என்று கேட்பது நியாயம் கிடையாது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக மெகா கூட்டணியை அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. அந்தவகையில், திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அவ்வாறு, நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதேபோல, தேமுதிக இரட்டை இலக்க தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த அதிமுக.. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!!
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை:
இவ்விரு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுகவோ கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதை காரணம் காட்டி, இரண்டு கட்சிகளையும் சேர்த்து ஒற்றை இலக்கத்தில் முடித்துக்கொள்ள நிர்பந்திப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், சமீபத்தில் திருப்பூர் தொகுதிக்கு வேட்பு அறிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இடதுசாரிகள் எதிர்பார்க்கும் இடங்களை தருவது சிரமம் என்று கூறிவிட்டு காங்கிரஸ், தேமுதிகவுக்கு மட்டும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவதா? என்று கேள்வி எழுப்பி பேசியிருந்தார்.
100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ்:
இதற்கு பதில் அளிக்கும் வகையில், கூட்டணி கட்சிகள் எங்களுடைய வேதனையை புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, ஒரு தேசிய கட்சி என்ற அடிப்படையில் முதலில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதன்பின்பு 63 தொகுதிகள் வழங்கப்பட்டது. அது 41 ஆகவும், பின்னர் 25 ஆகவும் ஆனது. இப்போது 3 தொகுதிகள் கூடுதலாக கொடுத்துள்ளார்கள். நாங்கள் இந்த தொகுதி ஒதுக்கீட்டை மனநிறைவுடன் பெற்றுக்கொண்டோம். ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக வாங்கியுள்ளோம் என்றார்.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து விலக தவாக முடிவு?.. பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்..
உங்கள் உரிமையை கேளுங்கள்:
இதற்காக தமிழ்நாடு காங்கிரசை குறிப்பிட்டு பேசுவது நியாயம் கிடையாது. எங்களுடைய தோழமை கட்சிகளை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் உரிமையை கேளுங்கள். முதலமைச்சருக்கு மனம் இருக்கிறது. மனம் இருந்தால் கொடுப்பார். காங்கிரஸ் கட்சிக்கு ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். எங்களுடைய வேதனையை கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.