‘பைசனில் நான் கண்ட…’ – கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா – அபினேஷேிற்கு ரூ.25 லட்சம் – முதல்வர் பாராட்டு

Tamil Nadu Shines : பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டிகளில் இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், சென்னையைச் சேர்ந்த கார்த்திகா அந்த அணியில் மிக முக்கிய அங்கம் வகித்தார். இதனையடுத்து அவரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் அவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார்.

பைசனில் நான் கண்ட... - கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா - அபினேஷேிற்கு ரூ.25 லட்சம் - முதல்வர் பாராட்டு

தங்கம் வென்ற கார்த்திகாவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On: 

26 Oct 2025 16:29 PM

 IST

பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆசிய இளையோர் கபடி போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றன. இந்த வெற்றியில் தமிழ்நாட்டு இளைஞர்கள் இருவரும் முக்கிய பங்காற்றினர்.  குறிப்பாக சென்னையின் கன்னகி நகரைச் சேர்ந்த கார்த்திகா, இந்திய பெண்கள் கபடி அணியில் மிக முக்கிய பங்கு வகித்தார். போட்டியில் இறுதி வரை தனது திறமையான ஆட்டத்தால் இந்தியா அணி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அதே போல ஆண்கள் கபடி அணியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் சிறப்பாக செயல்பட்டார்.  இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

கபடி வீரர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை

தங்கம் வென்று அக்டோபர் 27, 2025 அன்று சென்னை திரும்பிய கார்த்திகாவையும் அபினேஷையும் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றது. பின்னர் இருவரும் நேரடியாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர் இருவரையும் சந்தித்து பாராட்டிய முதல்வர் கார்த்திகாவிற்கும், அபினேஷிற்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டு பாராட்டு தெரிவித்தார். அவரது பதிவில், பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

முதல்வர் மு.கஸ்டாலினின் பதிவு

 

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, “உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?” என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

பைசன் படத்தை குறிப்பிட்ட முதல்வர்

கார்த்திகா மற்றும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நேற்று நான் பைசன் காளமாடனில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.