Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிறுவனை கடத்திய விவகாரம்.. எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் மனு மீது இன்று விசாரணை..

MLA Jegan Moorthi Bail Petition: சிறுவனை கடத்திய விவகாரத்தில் புரட்சி பாரதம் சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே நீதிபதி வேல்முருகன் விசாரித்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மாற்றம் செய்யப்பட்டு ஜூன் 26,2025 அன்று விசாரணைக்கு வருகிறது.

சிறுவனை கடத்திய விவகாரம்.. எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் மனு மீது இன்று விசாரணை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 26 Jun 2025 07:07 AM

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்ட ஏடிஜிபி உயர் நீதிமன்ற உத்தரவின் படி கைது செய்யப்பட்டார். மேலும், காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம் எல் ஏ வுமான ஜெகன் மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று அதாவது ஜூன் 26, 2025 அன்று விசாரணைக்கு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.

வழக்கு பின்னணி என்ன?

திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே வி குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்தனர்.

இந்த நிலையில், தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என கூறி, முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், ஒரு கட்சியின் தலைவராகவும் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள ஜெகன்மூர்த்தியை கைது செய்ய வஜ்ரா வாகனம், 200 போலீசார் திரண்டதால், அந்த பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவுகிறது என வாதிட்டார்.

கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்தி:

காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன் மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருக்கிறார். கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்.

இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபி-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி ஜெகன்மூர்த்திக்கும், ஏடிஜிபி- ஜெயராமனுக்கும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் நீதிபதி பி.வேல்முருகன் முன் நேரில் ஆஜராகினர்.

வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரத்குமார், டேவிட், வனராஜ் உள்ளிட்டோர் தனுஷ் வீட்டுக்கு சென்று அவரது சகோதரரை கடத்தியுள்ளனர். அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகளும் உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ஜெகன் மூர்த்தியிடம் ஏடிஜிபி பேசியிருக்கிறார். ஜெகன்மூர்த்திக்கு இந்த கடத்தலில் தொடர்பு உள்ளது. இதுசம்பந்தமாக வழக்கறிஞர் சரத் குமார், முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஏடிஜிபியிடமும், அவரது டிரைவர்களும் விசாரிக்கப்படுவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

70 ஆயிரம் மக்கள் எதற்கு வாக்களித்தனர் – நீதிபதி கேள்வி:

இதையடுத்து, நீதிபதி, எந்த தொகுதி எம்.எல்.ஏ. நீங்கள்? எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள் என ஜெகன் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெகன் மூர்த்தி, கே வி குப்பம் தொகுதியில் இருந்து 70 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

70 ஆயிரம் பேர் அவர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேச தான் வாக்களித்தனர். ஆனால் அதை மறந்து கட்ட பஞ்சாயத்து நடத்தி உள்ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா? என நீதிபதி வேல்முருகன், ஜெகன் மூர்த்தியிடம் கேள்வி எழுப்பினார்.

இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டது உங்கள் கட்சி விவகாரமா? நீங்கள் சாதாரண மனிதர் அல்ல. மக்கள் பிரதிநிதி. ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொகுதிக்கும் நீங்கள்தான் எம் எல் ஏ என தெரிவித்த நீதிபதி, நீங்களே காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார். கட்டப்பஞ்சாயத்து செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கேள்வி எழுப்பிய நீதிபதி, காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் உத்தரவிட்டார். மேலும் இந்த விசாரணையை ஜூன் 26 ஆம் தேதி தள்ளிவைத்தார்.

ஏற்கனவே நீதிபதி வேல்முருகன் விசாரித்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்று ஜூன் 26, 2025 அன்று எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வருகிறது. .