மே 14, 2026: தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதிகளில் மே 16ஆம் தேதி தொடங்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது.
தமிழகத்தில் மே 19 ஆம் தேதி வரை தொடரும் கனமழை:
இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் சில நாட்களுக்கு கனமழை தொடரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மே 14ஆம் தேதியான இன்று நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மே 15ஆம் தேதியான நாளை, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மற்றும் நீலகிரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மே 16ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், மே 17ஆம் தேதி தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், மே 18ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதியைப் பொருத்தவரையில் இடைநிலை நிலவலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுகவுடன் கூட்டணிக்கு தவெக தயாராக இருந்தது – சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்
கணிசமாக குறைந்த வெப்பநிலை:
தொடர் மழை நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் 36 டிகிரி செல்சியஸ் சுற்றிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 39.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.