Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அவலாஞ்சியில் பதிவான 18 செ.மீ மழை.. கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை..

Tamil Nadu Weather Alert: தென் மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஜூன் 27, 2025 தேதியான இன்றும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவலாஞ்சியில் பதிவான 18 செ.மீ மழை.. கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jun 2025 06:42 AM

வானிலை நிலவரம்: கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவம் மழையின் தீவிரம் குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கோவை நீலகிரி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் சோலையாரில் 17 சென்டிமீட்டர் மழையும், வால்பாறையில் 13 சென்டிமீட்டர் மழை, சின்ன கல்லார், சின்கோனா உள்ளிட்ட இடங்களில் 12 சென்டிமீட்டர் மழை, உபாசியில் 11 செண்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பார்சன் வாலி, மேல்பவானி உள்ளிட்ட இடங்களில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கியது முதலில் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பதிவாகி வருகிறது.

கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஜூன் 27 2025 தேதியான இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 28 2025 தேதியான நாளையும் இந்த இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 29 2025 முதல் ஜூலை 2 2025 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரையில் வெப்பநிலையின் தாக்கம் என்பது கணிசமாக குறைந்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகியுள்ளது. அதேபோல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளை கடந்து நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய வங்ககடல் பகுதிகள், மத்திய கிழக்கு வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்