Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Alert: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்ககூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்? சென்னையில் எப்படி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Sep 2025 15:07 PM IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 5, 2025: சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, செப்டம்பர் 4, 2025 அன்று நள்ளிரவு முதல் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் துரைப்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும், பள்ளிக்கரணை, கண்ணகி நகர், கோவை மாவட்டம் சோலையார் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், திருவூர் AWS (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 5, 2025 அன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், செப்டம்பர் 6, 2025 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் – ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 8, 2025 அன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் செப்டம்பர் 9, 2025 அன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செப்டம்பர் 10, 2025 அன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ‘ஒன்றுபடுவோம்… வெற்றி நிச்சயம்’ செங்கோட்டையன் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ் பதில்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை சில மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கான வாய்ப்புள்ளதா?


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச் சரணத்தால் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.