காவிரி நீர் விவகாரம்.. தமிழக அரசு தொடர்ந்த மனுவை ஆக.13-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!!
Cauvery Water Dispute: காவிரி மேலாண்மை ஆணயத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசு மறுப்பதாகத் தொடரப்பட்ட வழக்கினை வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. நிலுவையில் உள்ள 26.954 டி.எம்.சி நீரைத் உடனடியாகத் திறக்க உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
டெல்லி, ஆகஸ்ட் 10: தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகவும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் முதன்மை ஆதாரமாகவும் திகழ்வது காவிரி நீராகும். ஒவ்வோர் ஆண்டும் குறுவை மற்றும் சம்பா சாகுபடி காலங்களில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரை முறைப்படி விடுவிக்காமல் கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருவது தொடர்கதையாகி வருகிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் பலமுறை உத்தரவிட்ட போதிலும், அதனை மதிக்காமல் கர்நாடக அரசு நீரைத் திறக்க மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில், தமிழக விவசாயிகளின் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யவும், மாநில உரிமையை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த அவசர மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: விவசாயிகளின் கணக்கில் சேரப்போகும் புதிய தொகை.. ஊக்கத்தொகையை உயர்த்தி பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசின் உச்ச நீதிமன்ற முறையீடு:
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த தெளிவான உத்தரவுகளின்படியும், அட்டவணையின்படியும் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்கின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையீடு செய்தார். தமிழக வழக்கறிஞரின் காரசாரமான முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது.
26.954 டி.எம்.சி நிலுவை நீர் கோரிக்கை:
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், காவிரி மேலாண்மை ஆணயத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 26.954 டி.எம்.சி நிலுவை நீரை கர்நாடக அரசு உடனடியாகக் காவிரியில் திறந்து விட உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாண்மை ஆணயத்தின் ஆணைகளை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் கர்நாடக அரசுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நிலுவை நீர் கிடைத்தால்தான் பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பது தமிழக அரசின் முதன்மை வாதமாக உள்ளது.
எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள்:
காவிரி ஆணயத்தின் உத்தரவுகளைக் கர்நாடகம் தொடர்ந்து மீறி வரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு மட்டுமே தங்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் எனத் தமிழக அரசு நம்புகிறது. வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில், நிலுவை நீரைத் திறக்க உச்ச நீதிமன்றம் கர்நாடகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் தமிழக டெல்டா பகுதி உழவர் பெருமக்கள் காத்திருக்கின்றனர்.