காகம் இறந்து கிடந்த விவகாரம்…சென்னையில் பறவை காய்ச்சல் பரவல்..கால்நடைத்துறை எச்சரிக்கை!
Bird Flu Outbreak: சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இறந்து கிடந்த காகங்களை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தொற்று மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக கால்நடை பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் காகங்களுக்கு பறவை காய்ச்சல்
கேரளா மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகள், வாத்து பண்ணைகள் உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து பறவை காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக தமிழக-கேரள எல்லை பகுதியான கோயம்புத்தூர் சுற்றுவட்டார எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் முகாமிட்டு கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். மேலும், கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள கோழி பண்ணைகள் மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளிட்டவற்றில் பறவைகளுக்கு ஏதேனும் உடல்நல குறைவு, திடீர் உயிரிழப்பு உள்ளிட்டவை கண்டறியப்பட்டால் கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சென்னையில் மர்மமாக உயிரிழந்த காகங்கள்
பறவை காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அடையாறு பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் அதிக அளவிலான காகங்கள் உயிரிழந்த கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் அந்த காகங்களை ப் பற்றி ஆய்வுக்காக போபாலில் உள்ள ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோதனை குறித்து அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க:ஆர்டிஓ செல்லானில் இப்படியொரு மோசடியா? லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விவசாயி..தஞ்சாவூரில் சம்பவம்!
காகங்களுக்கு H5N1 தொற்று உறுதி
அந்த அறிக்கையில், காகங்களுக்கு H5N1 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை பகுதியில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கால்நடை துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், பொது இடங்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் காகங்கள் உயிரிழந்து கிடந்தால் அதனை கைகளால் தொட வேண்டாம் எனவும், உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டி புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும். அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பு
தற்போது வரை பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் தேவை எனவும் அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம், லாத்தூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சலால் அதிக அளவிலான காகங்கள் பலியாகின. இதனால், காகங்கள் இறந்து கிடந்த பகுதிகளில் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டன. தற்போது சென்னையில் பரவி வரும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: GPay பயன்டுத்துகிறீர்களா? உஷார்.. ரூ.2 லட்சம் அபேஸ்.. எச்சரிக்கும் போலீசார்!!