சாதி பார்த்து அறநிலையத்துறை பதவியா?.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்!!
அமைச்சரவை மற்றும் கட்சிப் பதவிகளில் சாதி ஆதிக்கம் உள்ளதா என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், "எங்கள் தலைவர் விஜய் அவர்கள் யாருக்கும் சாதியையோ, பணத்தையோ, மதத்தையோ பார்த்து வாய்ப்பு கொடுக்கவில்லை. மக்களுக்காகச் சேவை செய்யக்கூடிய மனநிலை யாரிடம் இருக்கிறது என்பதைப் பார்த்து மட்டுமே தற்போதைய அமைச்சரவைக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார்.
தவெக அமைச்சரவையில் சாதி வாரியாகப் பார்த்து பதவிகள் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவாதத்திற்கு, அக்கட்சியின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பிலும், முதலமைச்சர் விஜய் சார்பிலும் அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ரமேஷ், துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் தவெக எம்எல்ஏக்கள் பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையின் செயல் திட்டங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு அதிரடியான பதில்களை அளித்தார்.
இதையும் படிக்க: அவர் எந்த சமூகம் என்றே தெரியாது – சர்ச்சைக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம்
பிராமணர் என்பதால் அறநிலையத்துறை பதவியா?
அப்போது பேசிய அமைச்சர், “போருக்குச் செல்லும் முன்பே வெற்றியை உறுதி செய்து வாகை மலரை கையோடு எடுத்துச் சென்ற மாபெரும் வீரர் பெரும்பிடுகு முத்தரையர். அவரது வழியில்தான், கட்சித் தொடங்கும் போதே 2026-ல் நாம்தான் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையைத் தலைவர் விஜய் பெற்றார். அதனால்தான் நமது தவெக கொடியிலும் வாகை மலர் இடம் பெற்றுள்ளது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அப்போது, “நீங்கள் பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் உங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டதாகப் பேச்சு ஓடுகிறதே?” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மதச்சார்பற்ற சமூக நீதி என்பதுதான் எங்கள் கழகத்தின் அடிப்படை கொள்கை எனத் தலைவர் விஜய் முன்னிறுத்தியுள்ளார்.
எங்களிடம் பாகுபாடு கிடையாது:
“சமூகத்தில் உள்ள சாதிய வேற்றுமைகளைக் களைய வேண்டும் என்று இறுதி மூச்சு வரை போராடிய தந்தை பெரியாரையும், அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்று மாபெரும் சட்டப் புரட்சியை ஏற்படுத்திய அண்ணல் அம்பேத்கரையும் கொள்கை வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டுதான் நாங்கள் இந்த கழகத்தில் இணைந்திருக்கிறோம். சாதி, மதம், இனம், மொழி, பணம், பாலினம் என எந்தவொரு பாகுபாடும் எங்களிடம் கிடையாது என்ற உறுதிமொழியை நெஞ்சில் ஏந்தியே தினசரி பணியாற்றி வருகிறோம்” என்றார்.
“தலைவர் விஜய் சாதி பார்ப்பவர் அல்ல”:
அமைச்சரவை மற்றும் கட்சிப் பதவிகளில் சாதி ஆதிக்கம் உள்ளதா என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், “எங்கள் தலைவர் விஜய் அவர்கள் யாருக்கும் சாதியையோ, பணத்தையோ, மதத்தையோ பார்த்து வாய்ப்பு கொடுக்கவில்லை. மக்களுக்காகச் சேவை செய்யக்கூடிய மனநிலை யாரிடம் இருக்கிறது என்பதைப் பார்த்து மட்டுமே தற்போதைய அமைச்சரவைக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார். எனவே, இங்கு சாதியை வைத்துப் பேச வேண்டிய அவசியமே கிடையாது” எனத் தெரிவித்தார்.
“மக்கள் வாக்களித்தது விஜய்க்காகத்தான்”:
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், “இன்று அமைச்சர்களாகவோ, எம்எல்ஏ-க்களாகவோ இருக்கும் ரமேஷுக்கோ அல்லது ரவிசங்கருக்கோ மக்கள் வாக்களிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக எங்கள் தலைவர், முதலமைச்சர் விஜய்க்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
இதையும் படிக்க : சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான எம்பி பதவி.. ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிப்பு.. தவெகவின் வியூகம் என்ன?..
திரைத்துறையில் பல ஆண்டுகளாக விஜய் அவர்களைப் திரையில் பார்த்த மக்கள், யாரும் சாதியோ மதமோ பார்த்து அவரை ரசிக்கவில்லை. அவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாகத்தான் பார்த்தார்கள். தற்போது அவர் அமைத்துள்ள அமைச்சரவையையும் மக்கள் அதே அன்புடன்தான் பார்க்கிறார்கள். பிரிவினை பார்க்கும் எண்ணம் எங்கள் தலைவருக்குத் துளியும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.