கூட்டணி தொகுதிப் பங்கீடு.. விரைவில் திமுக அழைக்கும்.. செல்வப்பெருந்தகை நம்பிக்கை
திமுகவிடமிருந்து காங்கிரஸ் விலகிச் சென்றுவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். உண்மையில், தமிழ்நாடே அவரிடமிருந்து விலகிச் செல்லப் போகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்று அவர் கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை
சென்னை, பிப்ரவரி 02: கூட்டணி தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்பாக திமுகவிடம் இருந்து இரண்டு நாட்களில் அழைப்பு வரும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிகளை இறுதி செய்வது, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளை கட்சிகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த நவம்பர் மாதம் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார்.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதில் சந்தேகம்?…புயலை கிளப்பிய மல்லை சத்யா!
அடுத்தடுத்து திமுக – காங்., பேச்சுவார்த்தை:
அந்தவகையில், கிரிஷ் சோடங்கர் ஏற்கனவே தமிழகம் வந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். சமீபத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
3 மணி நேரமாக நடந்த ஆலோசனை:
இதில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடனான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவை குறித்து விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்கள் கட்சி குறித்து ஆலோசனை நடத்தியாக கூறினார்.
இபிஎஸ் கனவு பலிக்காது:
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் முடியும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை. அதற்குப் பிறகு, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் என்று கூறினார். மேலும், திமுகவிடமிருந்து காங்கிரஸ் விலகிச் சென்றுவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். உண்மையில், தமிழ்நாடே அவரிடமிருந்து விலகிச் செல்லப் போகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்திக்கப் போவது உறுதி என்றார்.
திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு:
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்கனவே ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உயர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன. மேலும் 2 அல்லது 3 நாட்களில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அனுப்புவதாக திமுக தெரிவித்துள்ளது. அழைப்பு வந்தவுடன், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பு…எப்போது தெரியுமா..அருண் ராஜ் கூறிய பதில்!
காங்கிரஸ் கட்சியின் பலம்:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அதனால்தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தந்தை சந்திரசேகர், காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தான் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சுட்டிக்காட்டினார். அதைத் தாண்டி, இதை அரசியல் ரீதியாக பெரிதுபடுத்தக் கூடாது என்றார்.