தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த அதிமுக.. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!!
AIADMK Forms seat-sharing talks Committee: அதிமுக ஆட்சி மன்ற குழுவுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, குழு தலைவராக இபிஎஸ், குழு உறுப்பினர்களாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
சென்னை, மார்ச் 16: கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக ஆயத்தமாகி வருகிறது. அதிமுக கூட்டணியில் தற்போது, பாஜக, பாமக (அன்புமணி), தமாகா, அமமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக 4 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டு குழுவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்படுகிறது. அதன்படி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இதையும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!!
தொகுதி பங்கீட்டு குழு:
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் பிரச்சார பணிகளை முறைப்படுத்த தேர்தல் பிரச்சார குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி, முன்னாள் சபாநாயகர் தனபால்.
தேர்தல் விளம்பர குழு:
தேர்தல் விளம்பர குழுவில் 8 பேர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ரஹீம், ராஜலட்சுமி, முன்னாள் எம்.பி. வேணுகோபால், ராஜ் சத்யன். தேர்தல் சம்பந்தமான சட்டக்குழுவில், 5 பேர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வக்கீல்கள் சேதுராமன், இன்பதுரை எம்.பி., பாபுமுருகவேல், பாலமுருகன்.
செய்தியாளர்கள் சந்திப்பு குழு:
செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், வைகைசெல்வன், மாபா பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : K. Ponmudi Tamil Nadu Election: விழுப்புரத்தில் தொடர் வெற்றியில் திளைத்த க.பொன்முடி… மீண்டும் களமிறக்கப்படுவாரா!
ஆட்சி மன்ற குழுவுக்கு புதிய நிர்வாகிகள்:
அதேபோல், அதிமுகவில் அதிகாரமிக்க பொறுப்பான ஆட்சி மன்ற குழுவுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, ஆட்சி மன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டு உள்ளார். குழு உறுப்பினர்களாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. வேணுகோபால், சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், வக்கீல் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.