வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்த மாணவி.. யூடியூப் பார்த்து இளைஞர் செய்த செயல்.. திடுக்கிடும் தகவல்கள்!
Erode Crime News : ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் வீட்டிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கல்லூரி மாணவிக்கு பிரசவ வலி ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், இளைஞர் யூடியூப் பார்த்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்திருக்கிறது.

ஈரோடு, மே 08 : ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 19 வயது இளம்பெண்ணுக்கு யூடியூப் பார்த்து இளைஞர் பிரசவம் பார்த்துள்ளார். பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்றைய நவீன காலத்தில் தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. பல்வேறு விஷயங்களை போன்களிலேயே பார்த்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பங்கள் தற்போது முக்கிய பங்கை வகித்து வருகின்றனர்.
யூடியூப் பார்த்து இளம்பெண்ணுக்கு பிரசவம்
அதே நேரத்தில், தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு மோசடிகள், குற்றச் செயல்கள் அரங்கேறி வருகின்றனர். பலரும் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியும் வருகின்றனர். அப்படி தான் ஒருசம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது. அதாவது, கல்லூரி மாணவிக்கு யூடியூப் பார்த்து இளைஞர் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான இளைஞர். இவர் தன்னுடைய தாயாருடன் கோபிசெட்டிப்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர் இருவரும் முதலில் நட்பாக பழகி வந்துள்ளார். அதன்பிறகு இருவரும் காதலித்துள்ளனர். இதனை அடுத்து, மனைவி என்று கூறிக் கொண்டு, அந்த பெண்ணுடன் இளைஞர் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். இவர் ஆக்குபேஷனல் தெரபி வேலை செய்து வருவதாக தெரிகிறது.
இருவரும் திருமணம் ஆகமலேயே ஒன்றாக கணவன் மனைவி போன்று வசித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயம் இளம்பெண்ணின் வீட்டிற்கு சொல்லாமல் மறைத்துள்ளனர். இளைஞருடன் வசித்து வந்த இளம்பெண், கர்ப்ப காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளதாக தெரிகிறது.
இளைஞர் செய்த செயல்
இளைஞர் வீட்டில் இருந்து செல்லும்போது, வீட்டை வெளி பக்கம் பூட்டி விட்டு சென்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2025 மே 6ஆம் தேதி இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், இளைஞர் பிரசவம் குறித்து யூடியூபில் பார்த்துள்ளார்.
யூடியூப் வீடியோக்களை பார்த்து அந்த பெண்ணுக்கு, பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதே நேரத்தில், அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை. இதனால், அடுத்த நாள் மாணவியை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் உடனே இளைஞரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு குழந்தையை இளைஞரின் தாய் கவனித்து வந்தது தெரிந்தது.
அங்கு குழந்தையின் தொப்புள் கொடி ஒரு கவரில் இருப்பதையும் கண்டனர். அதை கைப்பற்றி, இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, இளைஞரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
(Disclaimer: மருத்துவர் மற்றும் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் பிரசவம் பார்ப்பது தாய், சேய் உயிருக்கு ஆபத்தாகும்)