செங்கல்பட்டில் ஷாக் சம்பவம்.. பிரபல தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை!
Chengalpattu Theft News: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஜெயகோபால் என்பவரின் வீட்டில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு நகை கொள்ளை
செங்கல்பட்டு, செப்டம்பர் 2: செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரபல தொழிலதிபரின் வீட்டில் ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் ரூபாய் 6 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் இருக்கும் பாரதியார் தெருவில் வசித்து வந்த ஜெயகோபால் என்பவர் கடந்த ஆண்டு இறந்தார். கேஆர்சி ட்ரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்த அவரின் மறைவுக்குப் பிறகு மனைவி யமுனா பாய் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு சதீஷ் மற்றும் ரத்தீஷ் என இரு மகன்கள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணமாகி அருகே தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
வீட்டிற்கு வந்த நகைகள்
இப்படியான நிலையில் கடந்த ஒரு வார காலமாக உறவினர்களின் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தனது மகன் வீட்டிலிருந்த 120 சவரன் நகைகளை யமுனா பாய் தனது வீட்டிற்கு கொண்டுவந்து பயன்படுத்தி வந்திருக்கிறார் . கடந்த 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த லாக்கரில் நகையை பூட்டி வைத்துவிட்டு இரவு 8 மணியளவில் சதீஷ் வீட்டுக்கு யமுனா பாய் தூங்க சென்றிருக்கிறார்.
Also Read: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!
இதனிடையே நேற்று (2025 செப்டம்பர் 1) காலை 7 மணிக்கு வந்த போது மீண்டும் வீட்டிற்கு வந்த முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது மகன்களுக்கு விவரத்தை தெரிவித்தார். அவர்கள் அதிர்ச்சியாகி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். வீட்டில் உள்ளே பீரோவில் இருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.6 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மறைமலைநகர் போலீசாருக்கு யமுனா பாய் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்த காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஒன்றை ஆய்வு செய்தபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒரு நபர் வீட்டிற்கு நுழைவது போலவும், பின்னர் 1:30 மணி அளவில் வெளியேறும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நான்கு தனிப்படைகள் அமைப்பு கொள்ளையர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களாக சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவமானது அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.