BCCI President: விரைவில் ஓய்வு பெறும் ரோஜர் பின்னி! ராஜீவ் சுக்லா அடுத்த பிசிசிஐ தலைவரா?

Roger Binny Retirement: ரோஜர் பின்னி 70 வயது நிறைவு காரணமாக பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து 2025 ஜூலை 19 அன்று ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து, ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. 2025 செப்டம்பர் மாத பொதுக்கூட்டத்தில் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ராஜீவ் சுக்லா பிசிசிஐ துணைத் தலைவராகவும், பல்வேறு கிரிக்கெட் நிர்வாகப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

BCCI President: விரைவில் ஓய்வு பெறும் ரோஜர் பின்னி! ராஜீவ் சுக்லா அடுத்த பிசிசிஐ தலைவரா?

ரோஜர் பின்னி - ராஜீவ் சுக்லா

Published: 

02 Jun 2025 16:19 PM

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் ரோஜர் பின்னி குறித்த மிக முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முதல் பிசிசிஐயின் தலைவராக பதவி வகிக்கும் ரோஜர் பின்னி (Roger Binny), விரைவில் ஓய்வு பெற போகிறார். அதாவது ரோஜர் பின்னியின் பதவிக்காலம் வருகின்ற 2025 ஜூலை 19ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஏனெனில், இந்த நாளில் ரோஜர் பின்னிக்கு 70 வயது ஆகிறது. 70 வயதிற்கு பிறகு பிசிசிஐயின் அனைத்து அதிகாரிகளும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.

அடுத்த பிசிசிஐ தலைவர் யார்..?

ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினால், பிசிசிஐயின் புதிய தலைவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த பந்தயத்தில் முக்கிய நபர் ஒருவர் இடம் பிடித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாதான். செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்ட தகவலின்படி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா வருகின்ற 2025 ஜூலை மாதத்தில் பிசிசிஐயின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

65 வயதான ராஜீவ் சுக்லா பதவியேற்றதும் முதல் 3 மாதங்கள் நிர்வாக தலைவர் பதவி வழங்கப்படும். வருகின்ற 2025 செப்டம்பர் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்ஹில் அவருக்கு 66 வயதாகும். அப்போது, மீண்டும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். ராஜீவ் சுக்லா கடந்த 2020ம் ஆண்டு முதல் பிசிசிஐ துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், இவர் உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகவும், இந்தியன் பிரிமீயர் லீக்கின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஜர் பின்னி:

புதிய பிசிசிஐ தலைவர் நியமிக்கப்படும் வரை, ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பதவி வகிப்பார். கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரோஜர் பின்னி, பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வருகிறார். சவுரவ் கங்குலிக்கு பதிலாக பின்னி பிசிசிஐயின் 36வது தலைவரானார். தற்போது, அவரது 3 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

ரோஜர் பின்னியின் தலைவர் பதவியின் கீழ் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும், இவர்தான் மகளிர் பிரீமியர் லீக்கை தொடங்கினார்.

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டராக இருந்த பின்னி. அவர் இந்தியாவை 27 டெஸ்ட் போட்டிகளிலும் 72 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 830 ரன்களும், 47 விக்கெட்டுகளையும் எடுத்தார். தொடர்ந்து, 72 ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளையும் 629 ரன்களையும் குவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு முதல் உலகக் கோப்பையை வென்றபோது இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் (18), சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.