IND vs ENG: சூர்யவன்ஷி உள்ளே.. யார் வெளியே? இங்கிலாந்து எதிரான முதல் டி20.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி?
IND vs ENG 1st T20: அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு ஒரு பிரத்யேக சுழற்பந்து வீச்சாளர் பற்றாக்குறை இருந்தது. அந்த இடத்தை இங்கிலாந்து தொடரில் இந்திய அணியால் நிரப்ப முடியும். அயர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியில் அறிமுகமான சூர்யான்ஷ் ஷெட்ஜ் நீக்கப்பட்டு, ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
அயர்லாந்திடம் படுதோல்வி அடைந்த பிறகு, இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு (IND vs ENG) எதிரான டி20 தொடரில் வெற்றிக்காக களமிறங்குகிறது. வெறும் 15 வயதான அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து மண்ணில் தனது சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைக்கலாம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அதாவது 2026 ஜூலை 1ம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. அதன்படி, வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியிலேயே அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறும். அயர்லாந்திடம் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிறகு, நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி (Indian Cricket Team), மீண்டும் எழுச்சி பெற்று இங்கிலாந்தில் தங்களை நிரூபிக்க ஆர்வமாக உள்ளது. அதன் விளைவாக, இந்திய அணியில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
வைபவ் உள்ளே.. யார் வெளியே?
அயர்லாந்தில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து நிறையப் பேசப்பட்டது. இருப்பினும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், அணி நிர்வாகத்தின் மீது பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இந்தியாவின் தோல்வியைக் கருத்தில் கொண்டு, தற்போது அணியில் மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகமும் சாத்தியமாகலாம். ஆனால் கேள்வி என்னவென்றால், வைபவ் ஆடும் லெவனில் இடம் பிடித்தால், யார் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள்? வைபவிற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை நீக்க வேண்டியிருக்கலாம். அயர்லாந்தில் நடந்த 2 போட்டிகளிலும் சஞ்சு சோபிக்கவில்லை. மாற்றாக, இஷான் கிஷனை நீக்கிவிட்டு, சஞ்சுவை 3வது இடத்தில் களமிறக்கி, அபிஷேக்குடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கும் பொறுப்பை வைபவிடம் ஒப்படைக்கலாம்.




மீதமுள்ள பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிகப் பொறுப்புடன் விளையாடி, அயர்லாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு ஒரு பிரத்யேக சுழற்பந்து வீச்சாளர் பற்றாக்குறை இருந்தது. அந்த இடத்தை இங்கிலாந்து தொடரில் இந்திய அணியால் நிரப்ப முடியும். அயர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியில் அறிமுகமான சூர்யான்ஷ் ஷெட்ஜ் நீக்கப்பட்டு, ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். காயம் காரணமாக அயர்லாந்து தொடரிலிருந்து விலக்கப்பட்ட வருண் சக்கரவர்த்தியின் அணிக்குத் திரும்புவது குறித்து பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. வருண் குணமடைவதற்கான இறுதிக் கட்டத்தில் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வருண் விளையாடுவாரா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை வருண் சக்கரவர்த்தி விளையாடினால், அது இந்திய அணிக்கு சாதகமாக அமையலாம்.ஆனால், அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
ALSO READ: ஊரடங்கியதும் தொடங்கும் இந்தியா – இங்கிலாந்து போட்டி.. எங்கே காணலாம்?
இந்தியாவின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.