BCCI Schedule Change: சென்னையில் இருந்து சண்டிகர்! முக்கிய போட்டிகளின் இடத்தை மாற்றிய பிசிசிஐ..!
India Cricket Schedule Update: பிசிசிஐ, 2025ல் இந்தியாவில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடனான கிரிக்கெட் தொடர்களின் மைதானங்களை மாற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது டெஸ்ட் டெல்லிக்கு மாற்றம், தென்னாப்பிரிக்கா எதிரான முதல் டெஸ்ட் கொல்கத்தாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிகளின் மைதானமும் மாற்றப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 (IPL 2025) முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில், இந்திய அணியின் சில சொந்த போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ (BCCI) மாற்றியுள்ளது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வருகின்ற 2025 அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்தத் தொடர்களில் விளையாடவுள்ள 2 போட்டிகளின் இடத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வாரியம் இன்று அதாவது 2025 ஜூன் 9ம் தேதி வெளியிட்டது. இது தவிர, சில போட்டிகளின் இடமும் மாற்றப்பட்டுள்ளது.
இந்திய சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்தியாவில் உள்ள ஸ்டேடியத்தில் விளையாடும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருகின்ற 2025 அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்த கொல்கத்தா இடத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.




2வது டெஸ்ட் போட்டி எங்கு நடைபெறுகிறது..?
🚨 NEWS 🚨
BCCI announces updated venues for Team India (International home season) & South Africa A Tour of India.
Details 🔽 #TeamIndia | @IDFCFIRSTBank https://t.co/vaXuFZQDRA
— BCCI (@BCCI) June 9, 2025
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 10 முதல் 14 வரை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பிசிசிஐ அதன் இடத்தை மாற்றியுள்ளது. இதையடுத்து, இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும். எனவே, போட்டியின் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் இடமும் மாற்றம்:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 நவம்பர் 14ம் தேதி முதல் நடைபெறும். முன்னதாக இந்த போட்டி டெல்லியில் நடைபெற இருந்தது. இப்போது இந்த போட்டி நடைபெறும் இடத்தை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு பிசிசிஐ மாற்றியுள்ளது. இந்திய சுற்றுப்பயணத்தில், தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இடமும் மாற்றம்:
சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வெளிப்புற மைதானம் மற்றும் பிட்சுகள் புதுப்பித்தல் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இடையிலான ஒருநாள் தொடர் சென்னையில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டிகள் நியூ சண்டிகரில் உள்ள நியூ பிசிஏ மைதானத்திலும், கடைசி ஒருநாள் போட்டி புதுதில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திலும் நடைபெறும்.
தென்னாப்பிரிக்காவின் ஆண்கள் ஏ அணி வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி முதல் இந்தியா ஏ அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, 3 ஒருநாள் போட்டிகளுக்கான இடமானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் இருந்து ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.