AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இந்த அபூர்வ நரசிம்மரை தரிசியுங்கள்!

Lakshmi Narasimhar Temple: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் தம்பதியர் ஒற்றுமைக்காக பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. மகாலட்சுமியை மடியில் அமர வைத்த அபூர்வ திருக்கோலத்தில் நரசிம்மர் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். திருமணத் தடை, செவ்வாய் தோஷம், கடன் பிரச்சினைகள் மற்றும் குடும்ப சிக்கல்கள் நீங்க பக்தர்கள் அதிக அளவில் வழிபடுகின்றனர்.

தம்பதியர் வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா? இந்த அபூர்வ நரசிம்மரை தரிசியுங்கள்!
லட்சுமி நரசிம்மர்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 May 2026 12:30 PM IST

வைணவ சமயத்தில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றப்படுபவர் நரசிம்மர். பக்தர்கள் மனதில் எழும் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் உடனடியாக அகற்றும் தெய்வமாக இவரை நம்புகின்றனர். “நாளை என்பது நரசிம்மரிடம் இல்லை” என்ற பழமொழி கூட, அவர் அருளின் வேகத்தை எடுத்துரைக்கிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ள கனகவல்லி தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் பக்தர்களிடையே தனிச்சிறப்பை பெற்றுள்ளது. தம்பதியர் ஒற்றுமை, குடும்ப அமைதி மற்றும் திருமண தடைகள் நீங்க வேண்டி ஏராளமானோர் இந்த ஆலயத்தை நாடி வருகின்றனர்.

பிரகலாத பக்தியுடன் இணைந்த தல வரலாறு

இத்தலத்தின் வரலாறு நரசிம்ம அவதாரத்தின் மகத்துவத்தை நினைவுபடுத்துகிறது. அசுரராஜன் இரணியனின் மகனாகப் பிறந்த பிரகலாதன், சிறுவயதிலிருந்தே மகாவிஷ்ணுவின் தீவிர பக்தனாக இருந்தான். தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்று இரணியன் கட்டளை பிறப்பித்திருந்த போதிலும், பிரகலாதன் நாராயண நாமத்தை விடாமல் ஜெபித்தான். இதனால் கொதித்த இரணியன், தனது மகனையே பல்வேறு கொடுமைகளுக்கு உட்படுத்தினான். இறுதியில் பக்தனை காப்பாற்றும் பொருட்டு, மனித உடலும் சிங்க முகமும் கொண்ட நரசிம்மராக திருமால் அவதரித்து இரணியனை அழித்தார்.

லட்சுமி தாயார் தணித்த நரசிம்மரின் கோபம்

இரணியனை வதம் செய்த பின் நரசிம்மரின் உக்கிரம் உலகையே நடுங்க வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அப்போது மார்க்கண்டேய முனிவர் மகாலட்சுமியிடம் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. பக்தர்களுக்காக கருணையுடன் அருள்புரிய வேண்டும் என்று லட்சுமி தாயார் நரசிம்மரை சமாதானப்படுத்தியதாக ஐதீகம் நிலவுகிறது. இதன் அடிப்படையிலேயே லட்சுமி மடியில் அமர்ந்த நரசிம்மர் திருக்கோலம் உருவானது. திண்டிவனத்தில் உள்ள இந்த ஆலயத்தில், மகாலட்சுமி தாயார் கைகளை கூப்பியபடி நரசிம்மரை நோக்கி அமர்ந்திருப்பது மிகவும் அபூர்வமான காட்சியாக கருதப்படுகிறது.

கட்டிடக் கலை அழகில் மிளிரும் ஆலயம்

திண்டிவன நகரின் மையப்பகுதியில் கிழக்கு நோக்கி உயர்ந்து நிற்கும் ஐந்து நிலை ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. தரைத்தளத்திலிருந்து கீழிறங்கி செல்லும் அமைப்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு. உள்ளே சென்றவுடன் கருடாழ்வார் நரசிம்மரை வணங்கும் நிலையில் காட்சி தருகிறார். மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் தசாவதார சிற்பங்கள் உயிரோட்டத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் 63 நாயன்மார்கள், விஷ்ணு துர்க்கை, வேணுகோபாலர், கோதண்டராமர், சக்கரத்தாழ்வார் மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்களுக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அருள்பாலிக்கும் மூலவர் தரிசனம்

கருவறையில் லட்சுமி நரசிம்மர், தனது இடது தொடையில் மகாலட்சுமியை அமர வைத்தபடி அருள்பாலிக்கிறார். பக்தர்களின் வேண்டுதல்களை ஏற்று அருள் செய்ய வேண்டும் என்றபடி தாயார் வணங்கும் கோலம் காணப்படுகிறது. இந்த அரிய தரிசனமே இத்தலத்தின் முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் கனகவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் நான்கு கரங்களுடன் அனுமன் ஆகியோரின் சன்னிதிகளும் பக்தர்களை ஈர்க்கின்றன.

திருமண நலன் வேண்டி வரும் பக்தர்கள்

திருமணத் தடை நீங்கவும், தம்பதியர் இடையேயான மனக்கசப்புகள் அகலவும், செவ்வாய் தோஷம் மற்றும் ஏழரை சனி பாதிப்பு விலகவும் பக்தர்கள் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர். மேலும் ராகு திசை பிரச்சினைகள், கடன் தொல்லைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் நரசிம்மரை வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பிறகு பக்தர்கள் திருமஞ்சனம் செய்து, விரலி மஞ்சளால் மாலை கட்டி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கமாக உள்ளது.

Follow Us