சிவாலய ஓட்டம்… கன்னியாகுமரி மாவட்டத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு… முன்னேற்பாடுகள் தீவிரம்!
Shivalaya Ottam: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளதால் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் வதிக்கப்பட்டுள்ன. பல்வேறு பகுதிகளில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்தார்.

கன்னியாகுமரி சிவாலய ஓட்டத்துக்கு பல்வேறு முன்னேற்பாடுகள்
மகா சிவராத்திரியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 முக்கிய சிவாலயங்களை பக்தர்கள் ஒரே நாளில் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வார்கள். இது ஒரு பக்தி மாரத்தான் நிகழ்வாகும். இதில், சுமார் 90 முதல் 102 கிலோ மீட்டர் தொலைவு வரை சிவ பக்தர்கள் “கோவிந்தா கோபாலா” என்ற முழக்கத்துடன் சிவனை வழிபாடு செய்வார்கள். அதன்படி, இன்று சனிக்கிழமை ( பிப்ரவரி 14) முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் சிவாலய ஓட்டம் தொடங்கி நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் நிறைவடைகிறது. இந்த ஓட்டமானது, திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மலை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்கள் வழியாக இந்த சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளது.
பல்வேறு பகுதிகளில் 1000 போலீசார் பாதுகாப்பு
இந்த நிகழ்வையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று வரும் பக்தர்களுக்கு தேவையான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு ஆகிய பணிகளை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: காதலர் தினம்.. எல்லை மீறினால் கடும் நடவடிக்கை.. காதலர்களுக்கு போலீசார் எச்சரிக்கை!!
போலீசார் பைக்கில் தீவிர ரோந்து பணி
இதில், குறிப்பாக சிவாலய ஓட்டம் நடைபெறும் பாதையில் 2 கிலோ மீட்டர் தொலைவு இரு சக்கர வாகன ரோந்து என மொத்தம் 44 பைக்குகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதை தவிர்த்து, போக்குவரத்து சீரமைப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளை மேற்கொள்வதற்காக தனியாக போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். சிவாலய ஓட்டம் நடைபெறும் பாதையில் முக்கியமான இடங்களில் பக்தர்களின் உதவிக்காக “மே ஐ ஹெல்ப் யூ” என்ற மையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக அவர்களது பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.
கனரக லாரிகள் மாவட்டத்துள் நுழைய தடை
பக்தர்கள் சிவாலய பாதைகள் மற்றும் திசைகள், தொலைவு ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் 12 இடங்களில் வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் பக்தர்களுக்கு உதவியாக இருப்பதற்கு தனியாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளதால் கனிமவளங்களை ஏற்றி செல்லும் கனரக லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் படிக்க: தொண்டையில் சிக்கிய ஆப்பிள் துண்டு.. உயிருக்கு போராடிய 9 மாத குழந்தை..