AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சங்கடஹர சதுர்த்தி.. தீராத வினைகளைத் தீர்க்கும் 5 எளிய வழிபாட்டு முறைகள்!!

Sangadahara Chaturthi: விநாயகருக்குப் படைத்த மோதகம், கொழுக்கட்டை அல்லது வெல்லத்தை வழிபாட்டிற்குப் பிறகு ஒரு பசுமாட்டிற்கு உணவாக வழங்க வேண்டும். கோமாதா வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு இரண்டும் இணையும்போது, உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் தடைகள் அனைத்தும் விலகி, புதிய வாய்ப்புகள் உருவாகும்.

சங்கடஹர சதுர்த்தி.. தீராத வினைகளைத் தீர்க்கும் 5 எளிய வழிபாட்டு முறைகள்!!
சங்கடஹர சதுர்த்தி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Apr 2026 14:24 PM IST

விநாயகப் பெருமான் “முழுமுதற் கடவுள்” என்று போற்றப்படுபவர். எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் அவரை வணங்கினால், அந்த காரியம் தடையின்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, ‘சங்கடம்’ என்றால் துன்பம், ‘ஹர’ என்றால் அறுத்தல். அதாவது, நம் வாழ்வில் வரும் துன்பங்களை வேரறுக்கும் நாளே சங்கடஹர சதுர்த்தி. இந்த ஆண்டு ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று, உங்கள் பொருளாதாரச் சிக்கல்கள் தீரவும், தொழில் மற்றும் கல்வியில் வெற்றி பெறவும் செய்ய வேண்டிய 5 முக்கிய பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை விரிவாகக் காண்போம்.

இதையும் படிக்க: வராஹ ஜெயந்தி எப்போது? தேதி மற்றும் வழிபாடு முறை.. முழு விவரம்!!

பொருளாதார வளர்ச்சிக்கு: பச்சை பயிறு பரிகாரம்

ஜாதகத்தில் புதன் பகவான் பலவீனமாக இருப்பவர்களுக்குத் தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். இதைச் சரிசெய்ய, ஒரு கைப்பிடி முழு பச்சை பயிறை எடுத்து, ஒரு புதிய பச்சை நிறத் துணியில் மூட்டையாகக் கட்ட வேண்டும். இதனை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அருகில் உள்ள விநாயகர் கோவில் படிகட்டுகளில் வைத்துவிட்டு வர வேண்டும். இது உங்கள் வணிகத்தில் உள்ள தடைகளை நீக்கி, பணவரவை அதிகரிக்கச் செய்யும்.

கடன் தொல்லை நீங்க: அருகம்புல் மற்றும் வெல்லம்

விநாயகருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அருகம்புல். 21 அருகம்புற்களைக் கொண்டு சிறிய முடிச்சுகளாகச் செய்து, அதனை விநாயகரின் சிலைக்குச் சாற்ற வேண்டும். அதோடு, விநாயகருக்குப் பிடித்தமான வெல்லத்தை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றோ அல்லது ஞாயிற்றுக்கிழமையிலோ செய்து வந்தால், உங்கள் நிதிநிலை சீராகும்.

அறிவுத்திறன் மேம்பட: வன்னி இலை வழிபாடு

மாணவர்கள் மற்றும் புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் விநாயகருக்கு வன்னி இலைகளைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும். வன்னி மரம் தெய்வீக ஆற்றல் கொண்டது. வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சிக்கும்போது, ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, வீட்டின் வறுமையும் நீங்கும் என்பது ஐதீகம்.

காரிய வெற்றிக்கு: செம்பருத்தி மலர் அர்ச்சனை

சிவப்பு நிற மலர்கள் ஆற்றலின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, செம்பருத்திப் பூக்கள் விநாயகருக்கு மிகவும் விருப்பமானவை. ஞாயிற்றுக்கிழமை வரும் இந்தச் சதுர்த்தியில், செம்பருத்தி பூக்களால் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியமும் வெற்றியில் முடியும்.

தடைகள் நீங்க: பசு வழிபாடு

விநாயகருக்குப் படைத்த மோதகம், கொழுக்கட்டை அல்லது வெல்லத்தை வழிபாட்டிற்குப் பிறகு ஒரு பசுமாட்டிற்கு உணவாக வழங்க வேண்டும். கோமாதா வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு இரண்டும் இணையும்போது, உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வரும் தடைகள் அனைத்தும் விலகி, புதிய வாய்ப்புகள் உருவாகும்.

வழிபாட்டு முறைகள் மற்றும் விரத விதிமுறைகள்:

அதிகாலையில் நீராடி, விநாயகரை மனதார நினைத்து விரதத்தைத் தொடங்க வேண்டும். உடல்நிலை ஒத்துழைப்பவர்கள் மாலை வரை உணவு உட்கொள்ளாமல் (உபவாசம்) இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் பால் அல்லது பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் விநாயகர் கோவிலுக்குச் சென்று, விநாயகரை 9 முறை வலம் வந்து வணங்குவது உங்கள் பிரார்த்தனையை வலுப்படுத்தும். சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மிக முக்கியமான பகுதி ‘சந்திர தரிசனம்’. இரவு சந்திரன் உதயமான பிறகு, சந்திரனைப் பார்த்து வணங்கி, பின் விநாயகரை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: பிரதோஷம்.. ஈசனின் அருளைப்பெற இதை மட்டும் செய்ய மறக்காதீர்கள்!

சிவபெருமான் கூடத் திரிபுராசூரர்களை வதம் செய்யச் செல்லும் முன், விநாயகரை வழிபட மறந்ததால் தேர்க்கால் முறிந்தது. அதன் பின் விநாயகரை வணங்கியே வெற்றி பெற்றார். எனவே, “வினைகளைத் தீர்க்கும் விநாயகரை” இந்தச் சங்கடஹர சதுர்த்தியில் முழு நம்பிக்கையோடு வழிபட்டு, உங்கள் வாழ்வின் சங்கடங்களை நீக்கிச் சந்தோஷத்தைப் பெறுங்கள்.

Follow Us