AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர தீர்த்தவாரி உற்சவம் விமரிசை!

Kanchipuram Ekambaranathar Temple: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர விழாவின் நிறைவுப் பகுதியாகச் சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. வெள்ளி நந்தி வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி முன்னிலையில் அஸ்திர தேவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புனித நீராடல் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர தீர்த்தவாரி உற்சவம் விமரிசை!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Apr 2026 15:49 PM IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர விழாவின் நிறைவுப் பகுதியாகச் சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. வெள்ளி நந்தி வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி முன்னிலையில் அஸ்திர தேவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புனித நீராடல் நடைபெற்றது. இந்த வைபவத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு நடத்தினர். திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தத் தீர்த்தவாரி நிகழ்வுடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இனிதே நிறைவடைந்தது.

ஆலயப் பின்னணியும் கொடியேற்ற நிகழ்வும்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பஞ்சபூதத் தலங்களில் நிலத்திற்குரிய தலமாக விளங்கும் அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமர்சியாகத் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் காலையும் மாலையும் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மயில், சிம்மம், நந்தி என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாணம் கடந்த 1-ஆம் தேதி பக்திப் பெருக்குடன் நடந்தது.

தீர்த்தவாரி உற்சவத்தின் சிறப்பம்சங்கள்

திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து, விழாவின் 13-ஆம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதற்காக உற்சவ மூர்த்திகளான ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்க்குழலி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி நந்தி வாகனத்தில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க காஞ்சிபுரத்தில் உள்ள புனிதமான ‘சர்வ தீர்த்த குளக்கரைக்கு’ ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

அங்கு சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படும் ‘அஸ்திர தேவர்’ எனப்படும் புனித சூலாயுதத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க, அஸ்திர தேவர் சர்வ தீர்த்த குளத்தில் மூன்று முறை மூழ்கி தீர்த்தவாரி கண்டருளினார்.

பக்தர்களின் தரிசனமும் வழிபாடும்

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் திரண்டனர். தீர்த்தவாரி நடைபெற்ற சமயத்தில், குளத்தைச் சுற்றியிருந்த பக்தர்கள் “தென்னாடுடைய சிவனே போற்றி” என விண்ணதிர முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Also Read: சங்கடஹர சதுர்த்தி.. தீராத வினைகளைத் தீர்க்கும் 5 எளிய வழிபாட்டு முறைகள்!!

தீர்த்தவாரி முடிந்ததும், பக்தர்கள் புனித நீரைத் தங்கள் தலையில் தெளித்துக் கொண்டும், குளத்தில் புனித நீராடியும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

Follow Us