திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்…5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
Tiruchendur Murugan Temple : ஆங்கில புத்தாண்டையொட்டி , முருகனின் ஆறுபடை வீடுகளில் 2- ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் அதிகாலை முதல் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் .
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், தமிழகத்தில் உள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த திரளான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்படி, 2- ஆம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இன்று புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி, அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஆறு மணிக்கு கால சந்தி, 7:30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு
இதைத் தொடர்ந்து, 9 மணிக்கு உச்சிகால தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல, இன்று வியாழக்கிழமை ( ஜனவரி 1) பிரதோஷம் என்பதால் பிற்பகல் 2:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7:30 மணிக்கு ஏகாந்தம், 8 மணிக்கு பள்ளியறை பூஜை ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்வுகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம் முருகா என்ற சரண கோஷத்துடன் வழிபாடு மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: மார்கழி மாத பெளர்ணமி..திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு!




ஆறுபடை வீடுகளில் 2- ஆம் படை வீடு
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். தற்போது, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வதால் திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக வரும் வெளி மாவட்ட ஐய்யப்ப பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனத்துக்காக வருகின்றனர். இதே போல, நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அதிக அளவிலான பக்தர்களும் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
இதனால், கோவில் வளாகம் மற்றும் வெளிப் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. மேலும், அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில், பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் மேற்கொள்கின்றனர்.
மேலும் படிக்க: 2026ம் ஆண்டின் முதல் நாளே பிரதோஷம்.. உங்கள் கஷ்டங்கள் பறந்தோட நாளை இதை செய்தால் போதும்!!