மார்கழி மாத பெளர்ணமி..திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு!
Best Time To Visit Girivalam In Tiruvannamalai: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத பெளர்ணமியை முன்னிட்டு, கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற உண்ணாமுலையம்மன் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மாதம் தோறும் நடைபெறும் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கிரிவலத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் வருகை தருவார்கள். இவர்கள், சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து உண்ணாமுலையம்மன் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரரை வழி படுவார்கள். இந்த நிலையில், மார்கழி மாத பௌர்ணமி வரும் ஜனவரி 2- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) வருகிறது. அதன்படி, அன்றைய நாளில் கிரிவலம் வருவதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, மறுநாள் ஜனவரி 3- ஆம் தேதி ( சனிக்கிழமை மாலை 4:43 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பௌர்ணமி கிரிவலத்தில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஆன்மீக அறிவின் மூலம் தெய்வீக பேரின்பத்தை எவ்வாறு அடைவது? சத்சங்க உரையாடல் தொடர் காணொளி




பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள்
பொது மக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை, அவசர உதவி, இரு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், காணிக்கை செலுத்தும் இடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதே போல, திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை உரிய இடத்தில் நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள், போக்குவரத்து மாற்றங்கள், அவசர உதவி, கண்காணிப்பு கோபுரங்கள், கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்பன உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள்
மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதை ஆகிய பகுதிகளில் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கும் பணி, பக்தர்கள் தங்குவதற்கான இடங்கள் அமைப்பது, அவர்களுக்கு உணவு வழங்குவது என்பன உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றது.
மேலும் படிக்க: வைகுண்ட ஏகாதசி விரத நன்மைகள் இதுதான்.. புராணம் சொல்லும் கதை!