100% சுத்தமும் இல்லை, எனர்ஜியும் இல்லை! வெளுத்த பிரபல நிறுவனங்களின் சாயம்
FSSAI Crackdown: தவறான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய வாக்குறுதிகளை அளித்ததாக 150-க்கும் மேற்பட்ட உணவு நிறுவனங்களுக்கு FSSAI நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, போர்ன்விட்டா நிறுவனம் தனது பொய்யான விளம்பரக் கூற்றுகளைத் திரும்பப் பெற்றுள்ளது. நெஸ்லே, பெப்சிகோ, ஆம்வே உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்கள் பொருட்களின் லேபிள்களிலிருந்த "100% சுத்தமானது" மற்றும் "எனர்ஜி டிரிங்க்" போன்ற சந்தேகத்திற்குரிய சொற்களை நீக்கத் தொடங்கியுள்ளன.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) உணவுப் பொருட்களின் தவறான விளம்பரங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, போர்ன்விட்டா தயாரிப்பு நிறுவனமான மொண்டலெஸ் இந்தியா தனது பொருட்களில் இடம் பெற்றிருந்த ஊட்டச்சத்து ஒப்பீடுகள் மற்றும் ஆரோக்கியக் கூற்றுகளைத் திரும்பப் பெற்றுள்ளது. நுகர்வோரை திசை திருப்பும் வகையில் பொய்ப் பிரச்சாரம் செய்ததாக 150-க்கும் மேற்பட்ட பிரபல உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு FSSAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த பட்டியலில் நெஸ்லே, பெப்சிகோ, கோகோ கோலா, அபோட் மற்றும் ரெட் புல் போன்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்களும் அடங்கும். அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆம்வே நிறுவனம் தனது தேங்காய் எண்ணெய் விளம்பரத்திலிருந்து “100% சுத்தமானது” என்ற வார்த்தையை நீக்கியுள்ளது. மேலும், ஆன்லைன் வர்த்தக தளங்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பெரிய உணவக நிறுவனங்களுக்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விளம்பரங்களை பார்த்து உணவு பொருட்களை வாங்காமல் அதில் என்ன குறிப்பிட்டுள்ளது என்பதை தெளிவாக படித்து பார்த்து வாங்குவது சிறந்தது.
விளம்பரங்களை திரும்பப் பெற்ற போர்ன்விட்டா நிறுவனம்
சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியம் குறித்த உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகள் அளிக்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) கடுமையான கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, போர்ன்விட்டா மற்றும் கேட்பரி தயாரிப்புகளை வழங்கும் மொண்டலெஸ் இந்தியா நிறுவனம், தனது பொருட்களில் குறிப்பிடப்பட்டிருந்த சத்துக்கள் குறித்த ஒப்பீடுகள் மற்றும் கூடுதல் ஆரோக்கிய நன்மைகள் தொடர்பான விளம்பர வாசகங்களை மின்னணு வணிக வலைத்தளங்களில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது.
150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புதல்
நுகர்வோரை திசை திருப்பும் வகையில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வரும் இந்த விரிவான நடவடிக்கையின் மூலம், சுமார் 150-க்கும் மேற்பட்ட உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் நெஸ்லே, பெப்சிகோ, கோகோ கோலா, ரெட் புல், டானோன், அபோட் மற்றும் ஃபெர்ரெரோ உள்ளிட்ட பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்புகளில் மாற்றங்களைச் செய்த முன்னணி நிறுவனங்கள்
உணவு பாதுகாப்பு ஆணையத்தின் தொடர் நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆம்வே நிறுவனம் தனது தேங்காய் எண்ணெய் விளம்பரங்களில் “100 சதவீதம் சுத்தமானது” என்ற சொல்லை அகற்றியுள்ளதுடன், ஆற்றல் பானத்தில் இருந்து “எனர்ஜி டிரிங்க்” என்ற வார்த்தையையும் நீக்கியுள்ளது. அதேபோல, ஜூசா ஃபுட்ஸ் நிறுவனம் குழந்தை உணவுகளில் “எலும்புகளை வலுவாக்கும்” மற்றும் “நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” என்ற கூற்றுகளை விலக்கிக் கொள்ள சம்மதித்துள்ளது. முன்னதாக 2025 மே மாதத்தில் “100%” எனும் வார்த்தை நுகர்வோரிடம் தவறான உயர் எண்ணத்தை உருவாக்கும் என்பதால் அதைத் தவிர்க்குமாறு FSSAI அறிவுறுத்தியிருந்தது.
Also Read: ராக்கி கட்டுவது மட்டுமா? உடன்பிறப்புகளுடன் ரக்ஷா பந்தனை இப்படி கொண்டாடுங்க!
இணையவழி வர்த்தக நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை
சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி, ஆன்லைன் வணிக தளங்கள் மற்றும் உணவக சங்கிலிகள் மீதும் தனது பிடியை FSSAI இறுக்கியுள்ளது. இதன் அடிப்படையில் 12 இணையவழி வர்த்தக நிறுவனங்களுக்கும், 30-க்கும் மேற்பட்ட பெரிய உணவக நிறுவனங்களுக்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அவற்றின் மீதான விளம்பரங்கள் உண்மையான ஆதாரங்களுடன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இத்தகைய தீவிர நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். எனவே பொதுமக்கள் விளம்பரங்களை பார்த்து உணவு பொருட்களை வாங்காமல் அதில் என்ன குறிப்பிட்டுள்ளது என்பதை தெளிவாக படித்து பார்த்து வாங்குவது சிறந்தது.