தூக்கத்தின் 5 முகங்கள்: நீங்க எந்த டைப்-னு உங்களுக்கு தெரியுமா?
Beyond Early Birds and Night Owls: மனிதர்களின் தூக்க முறைகளை வெறும் இரண்டு வகையாகப் பிரிக்காமல் ஐந்து தனித்துவமான பிரிவுகளாகப் பிரிக்கலாம் என புதிய அறிவியல் ஆய்வு கண்டறிந்துள்ளது; இதில் முதல் இரண்டு பிரிவினர் தீவிர மன அழுத்தம் மற்றும் மனநலச் சவால்களுக்கு மத்தியிலும் தங்களின் தூக்கத் தரத்தில் மாறுபட்ட நிலைகளைக் கொண்டுள்ளனர்.
அறிவியல் உலகம் இதுவரை மனிதர்களை காலையில் சீக்கிரம் எழுபவர்கள் (Early Birds) மற்றும் இரவு தாமதமாக தூங்குபவர்கள் (Night Owls) என இரண்டு வகையாக மட்டுமே பிரித்து வந்தது. ஆனால், சமீபத்திய புதிய ஆய்வின்படி, மனிதர்களின் தூக்க நிலைகளை ஐந்து வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த தூக்கப் பழக்கவழக்கங்கள் மனித மூளையின் செயல்பாடு மற்றும் மனநலத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மன அழுத்தத்துடன் கூடிய மோசமான தூக்கம்
முதல் பிரிவில் உள்ளவர்களுக்குத் தூங்குவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. இவர்கள் படுக்கைக்குச் சென்றாலும் நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் தூக்கம் வரும். இதனால் இவர்களது தூக்கத் திருப்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இத்தகைய தூக்க முறை கொண்டவர்கள் மனச்சோர்வு, பதற்றம், எளிதில் கோபப்படுதல் மற்றும் தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாகும் அபாயம் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மனநல பாதிப்பிலும் சீரான தூக்கம்
இரண்டாவது பிரிவினர் ஒரு விசித்திரமான தன்மையைக் கொண்டுள்ளனர். இவர்களுக்குக் கவனக்குறைவு போன்ற சில மனநலச் சவால்கள் இருந்தாலும், இவர்களது தூக்கத்தின் தரம் மற்றும் நேரம் பாதிக்கப்படுவதில்லை. மன ரீதியான அழுத்தங்கள் இருந்தாலும், இவர்களது மூளை தூக்கத்தைப் பாதிப்படையச் செய்யாமல் பாதுகாக்கும் ஒரு தனித்துவமான எதிர்ப்புத் திறனைக் (Resilience) கொண்டுள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது.
தூக்க மாத்திரைகள் மற்றும் நினைவாற்றல் குறைபாடு
மூன்றாவது பிரிவில் உள்ளவர்கள் இயற்கையாகத் தூங்குவதை விட, தூக்க மாத்திரைகள், மூலிகை தேநீர் அல்லது பிற மருத்துவக் காரணிகளை அதிகம் சார்ந்திருக்கிறார்கள். இதனால் இவர்களது மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டு, காலப்போக்கில் நினைவாற்றல் குறைபாடு மற்றும் உணர்ச்சிகளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத சூழல் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்த நேரத் தூக்கமும் ஆக்ரோஷமான குணம்
நான்காவது பிரிவினர் தினசரி ஏழு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கும் வழக்கம் கொண்டவர்கள். இவர்களுக்குத் தொடர்ந்து தூக்கம் குறைவதால், எதிர்வினை ஆற்றும் வேகம் (Reaction time) குறைகிறது. அத்துடன், மொழிகளைக் கையாள்வதில் தடுமாற்றம் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் திடீர் ஆக்ரோஷம் அல்லது கோபம் வெளிப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Also Read: பிள்ளைகளுடன் தினமும் சண்டையா? இதோ நிபுணர்கள் தரும் எளிய தீர்வுகள்!
விட்டுவிட்டு வரும் தூக்கமும் பதற்றமும்
ஐந்தாவது பிரிவினருக்கு இரவில் தொடர்ச்சியான தூக்கம் இருப்பதில்லை; அடிக்கடி தூக்கம் கலைந்து விழித்துக் கொள்வார்கள். இந்தத் தூக்கக் சிதைவு காரணமாக இவர்களது தற்காலிக நினைவாற்றல் (Working memory) பலவீனமடைகிறது. மேலும், இவர்களுக்கு தேவையற்ற பயம், பதற்றம் மற்றும் பிற பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகும் ஆபத்துகள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.