மார்ச் 4, 2026: வண்ணங்களின் திருவிழா ஹோலி… கலர்ஃபுல் கொண்டாட்டங்களுக்கு முகவரியாக விளங்கும் பண்டிகை. வசந்த காலத்தில் வரும் ஹோலி பண்டிகை, தீமையை வென்று நன்மை பெற்ற வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் இதில் கலந்து கொள்கிறார்கள். ஒருவர்மேல் ஒருவர் வண்ணங்களைத் தூவி உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். நாடு முழுவதும் ஹோலி விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஹோலி விழாவில் அமெரிக்க தூதர் பங்கேற்பு:
அதேபோல், டெல்லியில் உள்ள BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் ஆசிரமத்திலும் ஹோலி விழா சிறப்பாக நடைபெற்றது. ஹோலி நாளன்று அக்ஷர்தாம் ஆலயத்தை அமெரிக்க பிரதிநிதி குழு பார்வையிட்டது. அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் கிரிஸ்டோபர் லாண்டோ, அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஆகியோர் புதன்கிழமை, மார்ச் 4 அன்று நியூ டெல்லியில் உள்ள BAPS சுவாமிநாராயண் அக்ஷர்தாம் ஆலயத்தை பார்வையிட்டனர்.
சுவாமிநாராயண் அக்ஷர்தாமிற்கு முக்கிய தலைவர்களை வரவேற்பது பெருமையாக இருப்பதாக குருஜி மஹந்த் சுவாமி மகாராஜ் தெரிவித்தார். இது இந்தியாவின் ஆன்மிக ஞானம், பண்பாட்டு பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் அமைதி போன்ற பொதுவான மதிப்புகளை பிரதிபலிப்பதாக கூறினார். அனைவருக்கும் மகிழ்ச்சியான, உற்சாகமான ஹோலி நல்வாழ்த்துகளை தெரிவித்தார். இத்தகைய பிரதிநிதிகள் வருகை தருவது நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
இது ஹோலி பண்டிகைக்கு சரியான முதல் பயண இடமாகும்; இந்த அற்புதமான ஆலயம் இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தையும் நிலையான மதிப்புகளையும் வெளிப்படுத்துகிறது என்று அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். மேலும், அக்ஷர்தாம் குழுவினருக்கு ஹோலி நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.