யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2025 முடிவுகள் வெளியீடு – முதல் 10 இடங்களில் 2 தமிழர்கள்
UPSC Civil Services 2025 : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி 2025 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் 2 தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களின் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி 2025 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வில் கலந்து கொண்டவர்கள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் முடிவுகளை பார்க்கலாம். இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி இரண்டாம் இடத்தையும், ஆகாஷ் துல் என்பவர் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் 7 ஆம் இடத்தை பிடித்த ஏ.ஆர்.ராஜா மொஹைதீனும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் முதல்வன் திட்டத்தில் படித்த பெண்
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் மார்ச் 6, 2026 அன்று வெளியாகியுள்ளன. இதில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்த கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ருதி தேசிய அளவில் 18வது இடத்தை பிடித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு
UPSC (Union Public Service Commission) civil services final result 2025 declared; 958 candidates make merit list.
Anuj Agnihotri, Rajeshwari Suve M and Akansh Dhull secure the first, second and third ranks.
— ANI (@ANI) March 6, 2026
இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்நிலை சிவில் சேவைப் பணியிடங்கள் யுபிஎஸ்சி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பொதுப்பிரிவில் அதிகபட்சமாக 317 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஒபிசி பிரிவில் 306 பேரும், எஸ்சி பிரிவில் 158 பேரும், எஸ்டி பிரிவில் 73 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் யுபிஎஸ்சி தேர்வில் இறுதி கட்டமான நேர்காணலில் தமிழ்நாட்டிலிருந்து 140 பேர் கலந்து கொண்டனர். முக்கியமாக, கடைசி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளமை பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் தேர்வில் ராஜேஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யுபிஎஸ்சி தேர்விலும் இரண்டாம் இடத்தை பிடித்து புதிய சாதனையை உருவாக்கியுள்ளார் அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா மொகதீன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 7வது இடத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் மீண்டும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளனர்.