மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
PM Modi chairs CCS meeting: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 2 நாட்களாக நடத்திய தொடர் தாக்குதலில் 86 வயதான ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் துபாய் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
டெல்லி, மார்ச் 02: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள சூழல் குறித்து ஆய்வு செய்ய, நேற்றிரவு பிரதமர் மோடி தலைமையில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு 9.30 மணிக்கு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, உடனடியாக இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலாளர்கள் பி.கே.மிஸ்ரா மற்றும் சக்திகாந்த தாஸ், முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்று தற்போதைய சூழல் குறித்து விளக்கமளித்தனர்.
இதையும் படிங்க: துபாயில் சிக்கித் தவித்த பி.வி. சிந்து.. அவர் சொன்ன ஷாக் தகவல்கள்!
முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை:
Prime Minister Narendra Modi chairs a meeting of the Cabinet Committee on Security (CCS) in Delhi. pic.twitter.com/yIdcryEt6o
— ANI (@ANI) March 1, 2026
மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் சுமார் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும், போர் சூழலால் அங்கு சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஈரானில் 10,000 பேரும், இஸ்ரேலில் 40,000-க்கும் அதிகமான இந்தியர்களும் உள்ளனர். வான்வழிப் பாதைகள் மூடப்பட்டதால் துபாய், தோஹா போன்ற விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கொண்டு வரும் முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
போர் பதற்ற சூழலின் பின்னணி:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 2 நாட்களாக நடத்திய தொடர் தாக்குதலில் 86 வயதான ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் துபாய் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கிடையில், கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், இத்தாக்குதலுக்கு எதிராகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஷியா பிரிவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்பாவிகள் கொல்லப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது… இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
நிலைமை மோசமடைந்தால் இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.