கருணை கொலை செய்யப்பட்ட ஹரிஷ் ராணா.. 10 நாட்களுக்கு பிறகு உயிர் பிரிந்தது!
Harish Rana Died After 13 Years Of Coma | உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹரிஷ் ராணா, சுமார் 13 ஆண்டுகள் கோமாவில் போராடி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவரை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கிய நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
லக்னோ, மார்ச் 24 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞர் ஹரிஷ் ராணாவின் உயிர் பிரிந்தது. இந்தியாவில் முதல் முறையாக கருணை கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், ஹரிஷ் ராணாவின் இத்தனை ஆண்டுகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், யார் இந்த ஹரிஷ் ராணா, அவர் கருணை கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
13 ஆண்டுகள் கோமாவில் போராடிய இளைஞர்
உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. இவர் 2013 ஆம் ஆண்டு 4வது மாடியில் விளையாடிக்கொண்டு இருந்தபோது, தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், கோமாவுக்கு சென்றுள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை கோமவில் இருந்து வந்தார். கோவாமில் இருக்கும் அவரை தங்களால் பராமரிக்க முடியவில்லை என்றும், மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்றும் அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது. இந்தியாவில் கருணை கொலைக்கு அனுமதி வழங்கியது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க : சிலிண்டர்.. பெட்ரோல்.. உரம் கையிருப்பு.. மேற்கு ஆசியா போர் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரை
இயற்கையாக மரணமடைவதற்கு தேவையான வழிகள் மேற்கொள்ளப்பட்டன
உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து ஹரிஷ் ராணா, அவரது வீட்டில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவரை கருணை கொலை செய்வதற்கான நடைமுறைகளை மருத்துவர்கள் தொடங்கினர். அவர் உயிருடன் இருப்பதற்கு தேவையான மருத்துவ உதவிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டு வந்தது. அதாவது அவர் இயற்கையான முறையில் மரணிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க : ரயில்களில் கல் வீசினால் கடும் நடவடிக்கை… ரயில்வே எச்சரிக்கை
ஹரிஷ் ராணாவின் உடல்நிலையை சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார். மார்ச் 14, 2026 அன்று அவர் எய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இயற்கையான முறையில் மரணிக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்தது.