தேன் நிலவில் கணவனை கொலை செய்த மனைவி.. கூட்டாளிகளுடன் கைது!

Husband Killed in Meghalaya in Honeymoon | மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தேன் நிலவுக்கு சென்றிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். திருமணம் முடிந்த 8 நாட்களில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த அவரது மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தேன் நிலவில் கணவனை கொலை செய்த மனைவி.. கூட்டாளிகளுடன் கைது!

கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் அவரது மனைவி

Updated On: 

09 Jun 2025 13:36 PM

உத்தர பிரதேசம், ஜூன் 09 : மேகாலயாவில் (Mehalaya) தேன் நிலவு (Honey Moon) சென்ற இடத்தில், மத்திய பிரதேசத்தை (Madhya Pradesh) சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த அவரது மனைவி உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இளைஞர் கொலை தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், தேன் நிலவுக்கு சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்டது எப்படி, மற்றும் அவரது மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேன் நிலவுக்கு சென்ற நபர் கொலை

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி. இவருக்கும் சோனம் என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் மேகாலயாவுக்கு தேன் நிலவுக்கு சென்றுள்ளனர். இவர்கள் நான்கிரியாட் கிராமத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கிருந்து மே 23, 2025 அன்று ஸ்கூட்டர் மூலம் சுற்றிப் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். வெளியே சென்ற அவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி அவர்களது மொபைல் போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 20 கிலொ மீட்டர் தூரத்தில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கத்தி குத்து காயங்களுடன் கிடைத்துள்ளது. அவரது உடலுக்கு அருகே அவரது மனைவி சோனம் அணிந்திருந்த ஆடையும் கிடந்துள்ளது. அந்த இடத்தில் ராஜா ரகுவன்ஷியின் உடல் மட்டுமே கிடைத்த நிலையில், காணாமல் போன சோனத்தை போலீசார் தேடி வந்தனர். சுற்றுலாவுக்கு வந்த புதுமன தம்பதிக்கு இத்தகைய சிக்கல் ஏற்பட்டது மேகலயா அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சோனத்தை தேடும் படி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், எங்கு தேடியும் சோனம் கிடைக்காததால் போலீசார் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர்.

மேகாலயா முதல்வர் எக்ஸ் பதிவு

காவல் நிலையத்தில் சரணடைந்த சோனம்

இந்த நிலையில், காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சோனம் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதுமட்டுமன்றி, கணவரை கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சோனம் உட்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.