செல்போனுக்கு வந்த மர்ம மெசேஜ்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
Man Blackmailed With AI-Generated Pics: கல்லூரி மாணவர் ஒருவருக்கு தனது சகோதரிகளின் புகைப்படங்களை AI-ல் எடிட் செய்து நிர்வாணப்படுத்தி அனுப்பியதோடு, சமூக வலைதளங்களில் பரப்புவிடுவேன் என மர்ம நபரிடம் இருந்து மிரட்டலும் வந்துள்ளது. இதனால், பதறிப்போன அந்த மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
ஹரியான மாநிலத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் AI-ஆல் உயிரை மாய்த்துக்கொண்ட துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஃபாரிதபாத் நகரைச் சேர்ந்தவர் ராகுல் பார்தி. 19வயதான இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருடைய செல்போன் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்த அவருடைய சகோதரிகளின் போட்டோகளை AI மூலம் தகாத முறையில் மாற்றி, ராகுல் பார்திக்கு அனுப்பி லட்ச கணக்கில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி ராகுல் பார்தி தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் பார்தியின் அப்பா கூறுகையில், கடந்த 10 நாட்களாக சரியாக சாப்பிடாமல், யாருடனும் பேசாமல் தனது மகன் அவதிப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். ’சாகுல்’ என்ற பெயரில் மெசேஜ் செய்த அந்த நபர் சமீபத்தில், ராகுல் பார்திக்கு, ராகுல் மற்றும் அவருடைய சகோதரிகள் இருக்கும் AI-ல் எடிட் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை அனுப்பி ரூ.20,000 கேட்டுள்ளான். பணத்தை தரமறுத்தால், இப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான். மேலும், ராகுலை தற்கொலைக்கும் தூண்டியதாக கூறப்படுகிறது.
Also read: சாலையோரம் நின்ற ஆட்டோ.. போர்வை சுற்றி வைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!




மனமுடைந்த ராகுல் பார்தி ஞாயிறன்று தூக்க மத்திரைகளை சாப்பிட்டு மயக்கம் அடைந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிற்றி ராகுல் பார்தி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் விசாரணையில், ராகுல் பார்தியின் அப்பாவிற்கும் அவருடைய சகோதரருக்கும் இடையில் தகராறு இருந்து வந்துள்ளது. அவர்தான் இப்படி செய்திருக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்மீதும், மற்றொரு பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் பார்தியின் நண்பன் ஒருவனும் பெண்களின் புகைப்படங்களை Deep fake செய்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். அவன் மீதும் காவல்நிலையத்தில் புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராகுல் பார்தியின் செல்போனை ஆய்வு செய்த பின், குற்றவாளியை கண்டறிந்து நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Also read: தலைதூக்கும் சைபர் மோசடி: ரூ.1,500 கோடி அபேஸ்.. பகீர் ரிப்போர்ட்!
இந்த நவீன காலத்தில், இதுபோன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. AI இன் அதீத வளர்ச்சியால், இது போன்ற குற்றச் செயல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகும் போது, அச்சமயத்தை மன தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இதற்கு தற்கொலை ஒருபோதும் தீர்வாக முடியாது.
(எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)