கேரளாவின் புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார் வி.டி. சதீசன்..
Kerala CM Announcement By Congress: அனைத்து குழப்பங்களும் முடிவுக்கு வந்த நிலையில், கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார். தீபா தாஸ் முன்ஷி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அனைத்து குழப்பங்களும் முடிவுக்கு வந்த நிலையில், கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார். தீபா தாஸ் முன்ஷி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதிலிருந்து, வி.டி. சதீசனை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என யூடிஎஃப் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வந்தன. ஆனால் கே.சி. வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகியோரும் முதலமைச்சர் பதவிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியதால், கட்சித் தலைமையின்மீது அழுத்தம் அதிகரித்தது.
மாநிலத்தின் முதலமைச்சராக யூடிஎஃப் தலைவரும் பரவூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.டி. சதீசன் பதவியேற்க உள்ளார். நீண்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
9 நாட்களுக்கு பின் அறிவிக்கப்பட்ட முதல்வர்:
தேர்தல் முடிவுகள் வெளியாகி பல நாட்கள் கடந்தும் முதலமைச்சர் யார் என்பது அறிவிக்கப்படாததால், மாநிலத்தில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக குழப்பநிலை நீடித்தது. இறுதியாக, ஒன்பது நாட்கள் நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே வி.டி. சதீசனின் இல்லத்துக்கு கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அறிவிப்புக்கு பின்னர் இந்திரா பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வந்த பின்னரும் பல நாட்கள் முதலமைச்சரை அறிவிக்காததற்காக காங்கிரஸ் கடும் விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக, “முதலமைச்சரை அறிவிக்காததால் மாநிலத்தில் அரசியல் மற்றும் அரசியலமைப்பு வெற்றிடம் உருவாகியுள்ளது” என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
காங்கிரஸின் அதிகாரப் போட்டியால்தான் மாநிலத்திற்கு தலைவரை தேர்வு செய்ய முடியாமல் போயுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. முதலமைச்சர் பதவிக்காக வி.டி. சதீசன், கே.சி. வேணுகோபால் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகிய மூவரும் எந்தவித சமரசத்திற்கும் தயாராகாமல் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.
“தன்னை முதலமைச்சராக்கவில்லை என்றால் பரவூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்; அங்கு இடைத்தேர்தல் நடந்தால் கே.சி. வேணுகோபால் போட்டியிடட்டும்” என்ற நிலைப்பாட்டை வி.டி. சதீசன் எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
கேரளாவில் காங்கிரஸை மிகப்பெரிய வெற்றிக்குக் கொண்டு செல்ல அவர் செய்த தீவிர அரசியல் பணியே, அவரை முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்த முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற தலைவர்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் கேரள மக்களிடையே அவருக்கு மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தின.
ஒரு கட்டத்தில் கே.சி. வேணுகோபாலை முதலமைச்சராக அறிவிக்கலாம் என்ற சூழல் உருவானபோது, சாதாரண மக்கள் கூட அதற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். “மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் தான் கேரளத்தை வழிநடத்த வேண்டும்” என்பதே தொண்டர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால் எம்.எல்.ஏ.க்கள் இடையே நடைபெற்ற கருத்துக்கணிப்பில் கே.சி. வேணுகோபாலுக்கே அதிக ஆதரவு கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும், கேரளா வந்திருந்த காங்கிரஸ் மேலிடம் கூட ஒரு கட்டத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லாவிட்டாலும், “கட்சியின் மூத்த தலைவர்” என்ற அடிப்படையில் தன்னை பரிசீலிக்க வேண்டும் என்ற வாதத்தில் ரமேஷ் சென்னித்தலாவும் உறுதியாக இருந்தார்.
இறுதியாக, “கேரள மக்களின் விருப்பம் வி.டி. சதீசன்தான்” என்ற கருத்தே இந்த முடிவிற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. மக்கள் விருப்பத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அதே நேரத்தில், இந்த முடிவை எடுக்க இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. மேலும், இன்று மாலை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடத்திய ஆலோசனையும் இந்த முடிவில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.